றிசாத் ஏ காதர்
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெய்னுலாப்தீன் நஸீர் அஹமட்,சம்பூர் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வைத்து கடந்த22ஆம் திகதியன்று, கடற்படை அதிகாரியொருவரை திட்டி தீர்த்த சம்பவம், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து அக்கூட்டத்தில் அமளிதுமளி ஏற்பட்டது.
இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இணைத்தலைவர்களான எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே,நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப் மற்றும் கதிர்காமத்தம்பி துரைரட்ணசிங்கம் ஆகியோரின் தலைமையில்,திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று 3௦.5.2௦16திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கடற்படை அதிகாரியை, கிழக்கு முதலமைச்சர் திட்டதீர்த்த விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபித்தார். இடைமறித்த அப்துல்லா மஹ்ரூப் எம்.பி, இந்த விவகாரம், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆகையால், அந்த விடயத்தை இவ்விடத்தில் பேசுவது உசித்தமானது அல்ல என்று சுட்டிக்காட்டினார். அவருக்கு ஆதரவாக, கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான சட்டத்தரணிஅல்ஹாஜ் ஜே.எம்.லாஹீர் மற்றும் ஏ.ஆர். அன்வர் ஆகியோரும் குரல்கொடுத்தனர். இதனால், கூட்டத்தில் பெரும் சலசலப்பும் அமைதியின்மை ஏற்பட்டு குறித்த விடயம் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துரையாடுவதிலிருந்து கைவிடப்பட்டது