எப்.முபாரக் -
கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் 466 பேருக்கு பட்டதாரிப் பயிலுநர் நியமனக் கடிதங்கள் கிடைத்துள்ளதாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.
வேலைவாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகளை பயிற்சியில் இணைத்துகொள்வதற்காக 2,590 பேர் நாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 466 பேர் உள்ளடங்குகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 242 பேரும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 169 பேரும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 55 பேரும் பயிலுநர் பட்டதாரிகளாகத் தெரிவாகியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவாகியுள்ள 169 பேரில் முஸ்லிம்கள் 124 பேரும் தமிழ்ப் பட்டதாரிகள் 40, பேரும் பெரும்பான்மையினத்தவர் 05 பேரும் என்று என்று தெரிவித்த அம்பாறை மாவட்ட தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் எஸ்.திலீபன், அம்பாறை மாவட்டத்தில் இருந்த பெரும்பான்மையினப் பட்டதாரிகளுக்கு ஏற்கெனவே பல கட்டங்களில் மறைமுகமாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே இந்த நியமனத்தில் அவர்களது எண்ணிக்கை குறைவு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஆகக் கூடுதலானோர் பட்டதாரிப் பயிலுநர் நியமனத்திற்குத் தெரிவாகியிருப்பதாக வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் எல். தீபாகரன் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஜுலை மாதம் 09ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
