நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் தாயாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீட்டை மீள ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவரது ஆலோசகராக செயற்பட்ட பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர, கொலன்னாவையில் வைத்து அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் துப்பாக்கிச் சூட்டின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
அதனையடுத்து பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பை முன்னிட்டு கொழும்பு -07ல் அமைந்துள்ள சமிட் தொடர்மாடியில் தற்காலிகமாக வீடொன்று வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் பாரதவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோருக்கும் விசேட பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
ஆட்சி மாற்றம் நடைபெற்று ஹிருணிக்கா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான பின்னரும் சுமணா பிரேமச்சந்திர உள்ளிட்ட குடும்பத்தினர் குறித்த வீட்டில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீட்டை காலி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தற்போது உத்தரவிட்டுள்ளார். மேலும் ஹிருணிக்கா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானதன் பின்னர் அந்த வீட்டில் குடியிருந்த காலப்பகுதிக்கு வாடகை செலுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
