ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மாற்றமொன்றை எதிர்பார்த்தே வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஆதரித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாற்றம் ஏற்படும் தமது பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு வழங்கப்படும் என மக்கள் கருதியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளை இந்த அரசாங்கமும் பின்பற்றி வருவதனால் வடக்கு கிழக்கு வாழ் மக்களின் வாழ்க்கையில் நிச்சயமற்றத்தன்மை நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் பேசும் மாவட்டச் செயலாளர்களை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.