சப்னி-
தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்காக இளைஞர், யுவதிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழ் மொழிமூலத்தில் இயங்கும் 11 பயிற்சி நிலையங்களுக்கு இப்போது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக நிந்தவூரில் உள்ள மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
இதன்படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (மட்டம் 5 மற்றும் 4), மின்னியல், எலக்ட்ரிக் மோட்டர் வைண்டர், மரக் கைவினைஞர், குளிர்சாதனப் பெட்டி மற்றும் காற்றுச்சீராக்கி திருத்துனர், நிர்மாண கைவினைஞர், நீர்க்குழாய் பொருத்துனர், உருக்கி ஒட்டுனர், தையல், தொலைக்காட்சி வானொலி மற்றும் அதனோடிணைந்த உபகரண திருத்துனர், அலுமீனியம் பொருத்துனர், அழகுக்கலை மற்றும் சிகை அலங்கரிப்பாளர், சமையற் கலைஞர், பேக்கர், அறை அலங்கரிப்பாளர், உணவு பரிமாறுனர், வாகன திருத்துனர், ஆடைத்தொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், அதிவேக தையல் இயந்திர இயக்குனர், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருத்துனர், சாரதி பயிற்சி போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தமிழ் பேசும் பிரதேசங்களில் இயங்கும் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சம்மாந்துறை, மத்திய முகாம், கல்முனை, காரைதீவு, பொத்துவில் (2 பயிற்சி நிலையங்கள்) அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, சாய்ந்தமருது, திருக்கோவில் ஆகிய பயிற்சி நிலையங்களில் நடாத்தப்படும் மேற்படி பயிற்சிநெறிகளுக்கு பாடசாலை கல்வியை நிறைவுசெய்த மற்றும் உயர் கல்விக்கான அனுமதி கிடைக்காத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி நெறிகளில் பெரும்பாலானவை தேசிய தொழில் தகமை சான்றிதழை (என்.வி.கியு.) அடிப்படையாகக் கொண்டவையாகும். மாணவர்களுக்கு காப்புறுதி மற்றும் சலுகைக் கட்டண பருவகாலச் சீட்டும், தெரிவு செய்யப்பட்ட பாடநெறிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவும் வழங்கப்படும். அதேவேளை, மேலதிக தொழிற்கள பயிற்சி கிடைப்பதுடன், தொழில் பெறுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
ஆர்வமுள்ளோர் தமது விண்ணப்பங்களை, உதவிப் பணிப்பாளர், மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம், பிரதான வீதி, நிந்தவூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒப்படைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.