காரைதீவு நிருபர்-
“ஆரோக்கியமான பாடசாலைக்கு ஆரோக்கியமான சுகாதாரக்கழகங்கள் அவசியமாகும். சுகாதாரக்கழகங்கள் உயிர்ப்பாக இயங்குகின்றபோது மாணவர்கள் உயிர்ப்பாக இயங்குவார்கள்.அப்போதுதான் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனுடன் இடம்பெறும்”
இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் வலயத்தின் சிறந்த சுகாதாரக்கழகங்களுக்கான விருதுவழங்குவிழாவில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
பாடசாலை சுகாதார மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் கல்வியமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறந்த பாடசாலை சுகாதார கழகங்களுக்கு விருது வழங்குவிழா நேற்று சம்மாந்துறை கோரக்கர் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
சுகாதார மேம்பாட்டுத்திட்டத்திற்கான வலய இணைப்பாளரும் ஆசரியஆலோசகருமான கே.ஜ.எம். அலியார் வரவேற்புரை நிகழ்த்த விருதுவிழாவிற்கு உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமைவகித்தார்.
சிறப்பதிதியாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர் கலந்துகொண்டார்.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
கடந்தவருட சுகாதாரக்கழகப்போட்டியில் எமது வலயத்தில் 85புள்ளிகளைப்பெற்ற இறக்காமம் றோயல் ஜூனியர் பாடசாலை முதலிடத்தைப்பெற்றதோடு கிழக்குமாகாணத்திலும் முதலிடத்தைப் பெற்று எமக்குப் பெருமை சேர்த்தது.
இம்முறை தங்கப்பதக்கத்தை இறக்காமம் அல்அஸ்றப் மத்திய கல்லூரியும் வெள்ளிப்பதக்கத்தை சம்மாந்துறை அல்மனார் வித்தியாலயமும் வெண்கலப்பதக்கத்தை நாவிதன்வெளி அல்ஹிக்மா வித்தியாயலமும் சுவீகரித்துள்ளது. இப்பாடசாலைகளின் அதிபர்கள் கழகப்பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன்.வாழ்த்துகின்றேன்.
சேவ்ரி பர்ஸ்ட் அதாவது பாதுகாப்பு முதலிடம் என்பார்கள். இப்போதெல்லாம் சனிற்றறி பர்ஸ்ட் என்கிறார்கள். கழிவகற்றல் செயற்பாடு உயிhhப்பாக இருந்தால் மட்டுமே வீடும் நாடும் ஆரோக்கியமாகவிருக்கும். சுத்தம் சுகம் தரும்.
பறவைக்காய்ச்சல் எலிக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல் போன்ற விலங்குநோய்களால் மனிதனுக்கு நிறைய பாதிப்புண்டு. நாம் கைகழுவுகின்ற பொறிமுறையில் கவனம்செலுத்தவேண்டும். பீகல் ஹொலிபோம் என்ற பக்ரீறியா பாதிப்பைஏற்படுத்தாமலிருக்க சிறந்த கைகழுவும் முறையைப் பின்பற்றவேண்டும். என்றார்.
விருதுவழங்கு விழாவில் இம்முறை தங்கப்பதக்கத்தை வென்ற இறக்காமம் அல்அஸ்றப் மத்திய கல்லூரியும் வெள்ளிப்பதக்கத்தை வென்ற சம்மாந்துறை அல்மனார் வித்தியாலயமும் வெண்கலப்பதக்கத்தை வென்ற நாவிதன்வெளி அல்ஹிக்மா வித்தியாயலமும் பாராட்டி விருது வழங்கிக்கௌரவிக்கப்பட்டன.
புதக்கம் பெற்ற பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.