பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் நேற்று மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு, வோட் பிளேசில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிசார் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்தத் தாக்குதலின் காரணமாக மாணவிகள் உள்ளிட்ட பத்துப்பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இன்னும் பலருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டிருந்தது.
அத்துடன் இரண்டு பிக்கு மாணவர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட 39பேர் சம்பவம் தொடர்பாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பல்வேறு தரப்பினரின் கண்டனத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.







