முகம்மது றியாஸ்-
மறிச்சிக்கட்டி பிரதேசம் வியாயாடி நீர்பாசனத்திற்குட்பட்ட பிரதேசம் என்று விளங்கப்பட்ட பிரதேசமே மறிச்சிக்கட்டி பிரதேசம் என அழைக்கப்படுகின்றது. மறிச்சிக்கட்டி சமூக- பொருளாதார பிரதேசம் 3950 ஏக்கர் மொத்தப் பரப்பைக் கொண்டது.
இப் பிரதேசத்தின் தெற்காக மோதரகம ஆறும் வடக்கிலும்இகிழக்கிலும் அடர்ந்த காடுகளே எல்லையாக காணப்படுகின்றன. இங்கு நெல்,சேனை,மேட்டு நிலப்பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கு பருவ கால மழையையும் குள நீர்பாசனைத்தையும், கால்வாய் நீர்பாசனத்தையும் நம்பி செய்கை பண்ணப்பட்டது.
இப்பிரதேசத்தில் 1670 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கும் 850 ஏக்கர் நிலம் மேலதிக நெற் செய்கைக்கும் கொண்டுவரக்கூடிய நிலை காணப்பட்டது. இப்பிரதேசத்தில் மறிச்சிக்கட்டி, பாலைக்குளி மற்றும் கரடிக்குளி ஆகிய கிராமங்கள் காணப்படுகின்றன.
அதே நேரம் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இப் பிரதேசத்தில் வாழ்ந்ததாக 1990 ம் ஆண்டு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
மேலும் மறிச்சிக்கட்டி கிராமம் வில்பத்து சரணாலயத்திற்கு அருகாமையிலேயே அமையப்பெற்றுள்ளது. மறிச்சிக்கட்டி கிராமம் 19 ம் நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட பழமை வாய்ந்த பிரதேசமாகும்.
இப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயம் மற்றும் யானைப்பிடித்தல் போன்ற தொழில்களை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வாறு காலா காலமாக வாழ்ந்த மக்கள் 1990 ஒக்டோபர் 23ம் திகதி விடுதலைப் புலிகளால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக 48 மணித்தியாலத்துக்குள் முசலி பிரதேச மக்கள் அணிந்த உடையுடன் மட்டும் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஒக்டோபர் 25ம் திகதி ஜிம்ஆ தொழுகையின் பின்னர் கடல் மார்க்கமாகவும் காட்டு வழிகள் ஊடாகவும் அனுராதபுரம் மற்றும் புத்தளம் பிரதேசத்துக்கு அகதியாகக் சென்று சுமார் 30 ஆண்டுகளின் பின்னர் முசலி பிரதேச மக்கள் மீள குடியேறி வருகின்றனர். அந்த அடிப்படையில் சிலரது காணிகள் இலங்கை கடற்படையினரால் முகாம்கள் அமைந்துள்ளமையால் மக்கள் தங்களது குடியிருப்புக்களில் குடியேற முடியாமல் அதிகாரிகள் மற்றும் அரசியல் தகைமைகளுக்கு எடுத்துக் கூடிய போதும் மீளப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. குறிப்பாகஇ சிலாபத்துறை மற்றும் மறிச்சிக்கட்டி கடற்படை முகாம்கள் இதுவரை அகற்றப்படவில்லை.
மேலும் இவ்வாறு காணிகளை இழந்த மக்களுக்கு வில்பத்து வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு அப்பால் உள்ள காணிகளே மக்களுக்கு குடியிருப்புக்காக பிரதேச செயலாளரினால் காணிகள் வழங்கப்பட்டன.
அவற்றுக்கான நிரந்தர வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். சிங்கள ரவாய மற்றும் பொதுபல சேனா அமைப்பினர் வில்பத்து காணிகள் அழிக்கப்பட்டு முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படுகின்றனர் என்று உண்மைக்கு புறம்பானது. அத்துடன் ஊடகங்களுக்கு பிழையான கருத்துக்களை வழங்கி வருவதன் மூலம் காயப்பட்ட உள்ளங்களை மீண்டும் காயப்படுத்தும் செயலாகும்.
நல்லாட்சி நிலவும் இன்றைய அரசாங்கத்தில் இவ்வாறான செயல்கள் இன நல்லுறவை பாதிக்கும் செயற்பாடாகும். இன மத குல பேதங்களை மறந்து சமாதானத்துடன் ஒரு கூட்டு சமூகமாக வாழ அனைவரும் விட்டுக் கொடுப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.(ச)