றியாஸ் ஆதம்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு எதிராக சுமத்தப்படும் போலிக் குற்றச்சாட்டுக்களின் பின்னனியில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேசத்தில் அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக 'சிப்தொற' புலைமைப் பரிசில் வழங்கல் மற்றும் 'சகன திரிய' திட்டத்தினூடாக பயனாளிகளுக்கு சுய தொழில் கடன் வழங்குதல் தொடர்பான ஆரம்ப விழா (16.04.2015 வியாழன்) ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் சமூர்த்தி மகா சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடந்தும் உரையாற்றுகையில்;
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட,கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் போட்டியிட தீர்மானித்துள்ளது அந்தளவிற்கு எமது கட்சிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. இது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு பாரிய சவாலாகவுள்ளது. அதற்காகவே எமது கட்சியை தோற்கடிப்பதற்கு முன்னேற்பாடாக கட்சியின் தலைமைக்கு எதிராக போலியான பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி இணையதளங்கள், முக நூல்களிலும் விசமப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் பின்னனியில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டுவருகின்றது. இவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற வல்லமை எமது கட்சியின் தலைமைக்குள்ளது.
எனவே எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எமது பலம் நிருபிக்கப்படும் குறிப்பாக அத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரைப் பெறுகின்ற விடயத்தில் கட்சி பெரும்பங்கை வகிக்கும் எமது கட்சியானது நாட்டின் நல்லாட்சிக்காகவும், முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிய கட்சியாகவும் எமது சமூகத்தின் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் சில பேரினவாதிகளும் கட்சியின் தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும், போலியான குற்றச்சாட்டுக்களையும் சுமத்துகின்ற நிலமை தோன்றியுள்ளது. இவைகள் யாவும் முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றமையினாலயே ஏற்படுகின்றது.
ஆனால், இவ்வாறான எதிர்ப்புக்கள், குற்றச்சாட்டுக்களை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்த வரலாறு கிடையாது. இன்று அரசின் நூறு நாள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நாட்டில் தேசிய ரீதியாக அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் எமது கட்சியின் தலைமை வட மாகாணத்தில் மக்களுடைய வாழ்வாதாரம், உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகளில் இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். அதே போன்றுதான் எமது கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இதனாலே எமது கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றது. ஆனால் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமைத்துவம் கடந்த காலங்களில் அமைச்சராகவிருந்து இந்த மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை இவர்களுக்கு நூறு நாட்கள் அல்ல ஆயிரம் நாட்கள் கொடுத்தாலும் அபிவிருத்திகளைச் செய்ய முடியாது இதற்கு சான்று அவர்கள் கடந்த காலங்களில் வகித்த அமைச்சுப் பதவிகளாகும் இப்பதவிகலூடாக வட,கிழக்கு மக்களுக்காக ஒன்றுமே இவர்களால் செய்ய முடியவில்லை.
கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணங்களைக் கூட அபிவிருத்திகளைச் செய்ய இயலாது விட்டுச் சென்ற பெருமை இவர்களையே சாரும்.
குறிப்பாக தேர்தல் வருகின்ற போது மாத்திரம் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமைத்துவம் இப்பிரதேசங்களுக்கு வந்து பணக்காரர்களை இறக்குமதி செய்து வேட்பாளர்களாக நிறுத்தும் அப்போது பணங்களை அல்லி வீசி வாக்கு கேட்கின்ற நிலமைகளே காணப்படும் கடந்த மாகாண சபை தேர்தலில் கூட நமது மண்ணில் நிகழ்ந்த விடயங்களை நாம் மறந்துவிட முடியாது.
எனவே அவ்வாறான தவறுகளை இம்முறையும் விட்டுவிடாமல் சமூகத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் பாடுபடுகின்றவர்களை இனங்கண்டு ஆதரவு வழங்குவதனூடாக சமூகத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் எனுவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சமூர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
