மன்மத வருடம் இன்று நண்பகல் பிறக்கவுள்ளது. இதனை தமிழர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பகல் 12.23க்கு கற்கடக லக்கினம் அவிட்ட நட்சத்திரம் 2ஆம் பாதம், திதி அபரபட்ஷ தசமி மஹர ராசியில் பிறக்கிறது.
எப்படியிருப்பினும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி புதிய வருடம் பகல் 1.47க்கு பிறக்கிறது.
புண்ணிய காலம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி காலை 8.23ல் இருந்து மாலை 4.23 வரையில் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்கணித பஞ்சாங்கத்தன் படி, காலை 9.47 முதல் மாலை 5.7 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புண்ணிய காலப்பகுதியில் மருத்து நீருடன் சிரசில் கடம்ப இலையையும் காலில் வேப்பம் இலையையும் வைத்து நீராட வேண்டும்.
அதுபோல், நாளை மறுதினம் காலை 7.52 தொடக்கம் 9.48 வரையிலும், மீண்டும் 10 மணி தொக்கம் 11 மணிவரையில் கைவிசேடம் பெறுவதற்கு உகந்த நேரம் என தெரிவிக்கப்படுகிறது.
மன்மத வருடம் தமிழ் வருடங்களான 60 வருடங்களில் 29வது ஆண்டாக வருவதாகும். கலி பிறந்து 5116வது வருடமாகும். சூரியன் மேஷம் ராசியில் நுழைவதை தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இராசி மண்டல வலயத்தில் உள்ள மேஷ ராசியில் சூரியன் உதயமாகும் தினமே தமிழ்-இந்துக்களின் புது வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும்.
புதுவருட விழாவானது; உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் பின்பற்றும் சமையங்களின் நியதிகளுக்கு அமைவாக புதுவருடத்தினை கொண்டாடுகின்றார்கள். அதற்கேற்ப சித்திரைமாத முதல் நாளை இந்து சமயத்தைப் பின்பற்றும் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.
புதுவருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கங்கத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம், குறிப்பிட்ட சுப நேரத்தில் (விஷூ புண்ணிய காலம்) மருத்து நீர் வைத்து, தோய்ந்து புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும், கைவிசேஷம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது.
வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் எமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது இந்துக்களின் ஐதீகம்.
