ஹாசிப் யாஸீன்-
வெளிக்கள அரச ஊழியர்களுக்கு மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தில் அம்பாறை மாவட்ட கிராம உத்தியோகத்தர்களும், வெளிக்கள உத்தியோகத்தர்களும் புறக்கணிக்கப்பட்டதையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களும், வெளிக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து பிரதேச செயலக முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (22) புதன்கிழமை ஈடுபட்டனர்.
இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இன்று அம்பாறை மாவட்டம் பூராகவும் இடம்பெற்றது.
2014ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட இத்திட்டம் நாட்டின் ஏனைய மாவட்டத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கும், வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச ஊழியர்களுக்கு இன்றுவரை மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை என கிராம உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவிப்பதோடு உடன் பெற்றுத்தர ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.