ஏறாவூர் நிருபர்-
மட்டக்களப்பு-ஏறாவூர் அக்னி இசைக்குழுவின் 15ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட விஷேட விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளம் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் உட்பட தமிழ்-முஸ்லிம் கலைஞர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் 42 பேர் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஏறாவூர் எல்லை நகர் மைதானத்தில் அக்னி இசைக்குழுவின் தலைவர் சு.ரகுபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகஸ்வரன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உறுப்பினர் இரா. துரைரட்னம் பிரதேச செயளாலர் யு.உதயசிறிதர் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் க.சித்திரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்-முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்சிகள் அரங்கேற்றப்பட்ட இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு பல்வேறு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன. நிகழ்வுகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும் கையளிக்கப்பட்டன.
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஜி.ஏ.நாஸர்; இளம் ஊடகவியலாளர்களான பீ.சபேஷ் ஏ.எம்.அஸ்மி மற்றும் ஏ.எம்.றிகாஸ் ஆகியோர் உட்பட ஊடகத்துறையைச்சேர்ந்த 7பேர் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டவர்களாவர்.