எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
அம்பாறை மாவட்டம் ஒலுவில் களியோடை ஆற்றிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், பெருமளவிலான முதலைகள் நடமாடுகின்றமையினால், அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் தமது தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதில் அச்சமடைந்துள்ளனர்.
இதேவேளை, இந்த ஆற்றுப் பகுதியில் இவ்வாறு அதிகளவிலான முதலைகளின் நடமாட்டம் உள்ளமை குறித்து, எச்சரிக்கைப் பதாதைகளைப் பார்வைக்கு வைக்க வேண்டிய தேவை உள்ளதாகவும், அப்பகுதி பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
களியோடை ஆறானது, இங்குள்ள நெற் செய்கைக் காணிகளுக்கு நீர் வழங்கும் மார்க்கமாகவும், காணிகளிலுள்ள மேலதிக நீரை வெளியேற்றும் வழியாகவும் உள்ளது.
களியோடை ஆற்றியினை அண்டிய பகுதிகளில் விவசாயக் காணிகள் காணப்படுகின்றதோடு, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் களியோடை ஆற்றின் அருகாமையிலேயே அமைந்துள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், களியோடை ஆற்றிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் முதலைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றமையானது, இந்தப் பகுதியில் அச்ச நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, களியோடை ஆற்றிலுள்ள முதலைகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக, இந்த ஆற்றுப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளமையினை வெளிப்படுத்துகின்ற எச்சரிக்கைப் பதாதைகளையாவது, மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகிறது.