அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அத்தனை தகைமைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு சிறந்த ஆளுமை மிக்க தலைவராக ஹாபிஸ் நஸீர் அகமட் கிழக்கு மாகணத்திற்கு முதலமைச்சராக கிடைத்துள்ளமை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்லாது முழு கிழக்கு மாகாணத்திற்கும் பெருமையாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரை வரவேற்று ஏறாவூர் மக்களால் நடத்தப்பட்ட வரவேற்பு விழாவும், பொதுக் கூட்டமும் வெள்ளிக்கிழமை ஏறாவூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று முஸ்லிம் காங்கிரஸ் அபாரா வளர்ச்சி கண்டு வருகின்றது. சமூகத்தின் ஒற்றுமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் தமது சுயநல விருப்பு, வெறுப்புகளுக்கப்பால் அனைத்தையும் தூக்கி வீசியெறிந்து விட்டு வந்துள்ள எமது மூத்த அரசியல்வாதிகளான அலிசாஹிர் மௌலானா மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் போன்றவர்கள் மு.கா. வில் இணைந்து கொண்டமை அக்கட்சிக்கும், சமூகத்திற்கும் மேலும் பலம் சேர்க்கும்.
இந்த நாட்டில் நிலவி வந்த கடந்த கொடுங்கோல் ஆட்சியிலிருந்து நலாட்சிக்கான மாற்றத்தை கொண்டுவருவதில் மு.கா. அளப்பரிய பங்களிப்பை செய்துள்ளது.
இன்று எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியின் கீழ் மூவின சமூகங்களும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்ந்து வருகின்றனர். அந்த நிலை தொடர வேண்டும். அதற்கான ஆதரவையும், ஒத்துழைப்பையும் இன, மத, கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் வழங்க வேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக மு.கா. வைச்சேர்ந்த ஒருவர் எமக்கு கிடைத்துள்ளமையினால் முஸ்லிம் காங்கிரஸினதும், மக்களினதும் நீண்டகால கனவு நிவைவேறி இருக்கின்றது. இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி கூற வேண்டும். பொறுமையாகவும், நிதானமாகவும், ஒற்றுமையாகவும் செயற்படும் போது வெற்றிகளும், உதவிகளும் எம்மை வந்து சேரும்.
இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக கிடைத்துள்ள இச்சந்தர்ப்பதில் இப்பிராந்திய மக்கள் குரோதங்களையும், அரசியல் வேறுபாடுகளையும், பிரதேச வாதங்களையும் மறந்து ஒற்றுமையுடன் ஒரு அரசியல் சக்தியாக மாற்றிக் கொள்ள முனைய வேண்டும் என இதன் போது வேண்டிக் கொண்டார்.
இந்த நிகழ்வில்; கிழக்கு மாகாண முதலமச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, சிப்லி பாறூக் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.