நல்லாட்சி தொடர்பாக பேசியிருப்போமாகவிருந்தால் தாக்கப்பட்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டிருப் போம்.அவ்வாறான நிலைமையொன்றே கடந்த மூன்று வருடங்களில் காணப்பட்டது என பொதுநிருவாகம், நல்லாட்சி மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் பிரதிப்பொலிஸ்மா அதிபரின் அதிகாரங்களையும் மீறி குற்றமிழைத்தவர்களை வௌ்ளைவான்களில் கடத்துவதற்கும் சிறைகளில் அடைப்பதற்கும் உத்தரவிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவ்வாறு எம்மால் செயற்படமுடியாது. தற்போது நாம் மிகமெதுவாக செயற்படுவதாக குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
வறுமை நிலையத்தின் ஏற்பாட்டில் குடிமக்கள் மதிப்பீட்டை அட்டை வௌியிடும் நிகழ்வு நேற்று ஜெய்ஹில்டன் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது நல்லாட்சி தொடர்பில் அனைவரும் பேசுகின்றார்கள். வீதியோரங்கள் முதல் மருத்துவமனைவரை இவ்விடயம் குறித்து அவதானித்து வருகின்றார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நல்லாட்சி தொடர்பாக நாம் பேசியிருப்போமாகவிருந்தால் தாக்கப்பட்டிருப்போம். வௌ்ளைவானில் கடத்தப்பட்டிருப்போம். அவ்வாறான ஒரு நெருக்கடியான நிலைமையே காணப்பட்டது. ஆனால் இன்று அந்நிலைமையானது முற்றாக மாறியுள்ளது.
குறிப்பாக மாதுலுவாவே சோபித தேரர் அவர்களின் 75ஆவது பிறந்த தினத்தின்போது உரையாற்றியவர் இந்த நாட்டில் நல்லாட்சியொன்று உருவெடுப்பதற்கு தனது எதிர்காலத்தை அர்ப்பணிக்கவுள்ளதாக குறிப்பிட்டார். அன்று முதல் நாம் அனைவரும் நல்லாட்சி நோக்கிய பயணத்தை படிப்படியாக ஆரம்பித்தோம்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நூறுநாள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். எமது நிகழ்ச்சிநிரலின் பிரகாரம் செயற்படுவதில் சில தாமங்கள் காணப்படுகின்றன. நல்லாட்சியை உறுதிப்படுத்துவற்காக சட்டம் ஒழுங்கினை பின்பற்றியே செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. அதன் காரணமாகவே இவ்வாறான தாமங்கள் ஏற்படுகின்றன. தற்போது 45 தினங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னமும் 55 தினங்கள் காணப்படுகின்றன. குறித்த காலப் பகுதியில் எமது செயற்திட்டத்தினை முழுமையாக செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த காலத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர், பிரதிப்பொலிஸ்மா அதிபரின் அதிகாரங்களையும் கடந்து குற்றமிழைத்தவர்களை வௌ்ளைவான்களில் கடத்துவதற்கும் சிறைகளில் அடைத்து தண்டனை வழங்குவதற்கும் உத்தரவிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவ்வாறான செயற்பாடுகளை எம்மால் மேற்கொள்ள முடியாது என்பதை மிக மெதுவாக செயற்படுவதாக எம்மீது குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பொலிஸஸ் சேவையில் பாரிய அரசியல் தலையீடுகள் காணப்பட்டன. பொலிஸார் தமது பதவிகளை உயர்த்திக்கொள்வதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும், இடமாற்றங்களைப்பெற்றுக்கொள்வதற்குமாக அரசியல்வாதிகளின் பின்னால் சென்ற துரதிஷ்டவசமான நிலைமை காணப்பட்டடிருந்தது. இவ்வாற துரதிஷ்டமான விடயங்கள் தொடர்வதற்கு தொடர்ந்தும் இடமளிக்கமுடியாது. 17ஆவது திருத்தச்சட்டம் மீளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படும். அதுமட்டுமன்றி நாம் வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு நல்லாட்சி உறுதிப்படுத்தப்படும் என்றார்.