இக்பால் அலி-
யாழ்ப்பாணத்தில் தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசியல் பிரமுகர்களின் படங்களை எரிப்பது தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது எதிராக கோஷம் எழுப்புவது என்பதெல்லாம் நாட்டில் நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கான வழிகோலாக அமையாது என்று சிவன் புதிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஷ் வேலாயுதம் தெரிவித்தார்.
தோட்டத் தொழிற் சங்கத் தலைவர்களுடனான சந்திப்பு தெல்தெனிய சிவன் வலது குறைந்தோர் நிலையத்தில் 24-02-2015 நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை தாங்கிய சங்கத்தின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ் வேலாயுதம் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த புதிய அரசாங்கத்தால் எடுத்த விடயங்களை எல்லாம் விரைவாக நிறைவேற்றி வைப்பது என்பது இயலாத காரியமாகும். எதையும் படிப்படியாகத்தான் செய்ய வேண்டும். தென்னிலங்கை மக்களைத் திருப்தி படுத்திக் கொண்டு வடபுல மக்களுடைய பிரச்சினைகளை இந்த அரசாங்கம் கையாள வேண்டிய தேவைப்பாடு இருந்து கொண்டிருக்கிறது.
எதையும் எடுத்த எடுப்பிலே நிறைவேற்றி வைக்க முடியாது. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தென்னிலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை புதிய அரசாங்கத்திற்கு இருக்கிறது. கடந்த காலங்களில் பட்ட துன்பங்களை நாங்கள் இன்னுமின்னும் படுவதற்கு இடமளிக்கக் கூடாது. தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள் நன்கு தெளிவான அரசியல் ஞானங்களைக் கொண்டவர்கள்.
அவர்களுக்கு எதிராக சேறு பூசுவது கொடும்பாவி எரிப்பது என்பதெல்லாம் தேவையற்ற விடயங்களாகும். தற்போது பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சிங்கள தேசிய முன்னணி என்ற அமைப்பு புரொன் லைன் சஞ்சிகையை இலங்கையில் விநியோகம் செய்ய பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அனுமதித்தமைக்கு பயங்கரவாத பொலிஸ் பிரிவில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இந்த சஞ்சிகையை கடந்த காலங்களில் சுங்கத் திணைக்களத்தினால் தடைவிதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததை ரனில் விக்கிரமசிங்க நேரடியாகத் தலையிட்டு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இந்த சின்ன விடயத்தையே தென்னிலங்கையிலுள்ள கடுமையான இனவாதப் போக்குடையவர்கள் பெரிது படுத்திக் கொண்டு ஊடகங்களில் பரப்புரைகள் செய்து வருவதை அதானிக்க முடிகிறது. பொது பல சேன உட்பட 20 பௌத்தவாத அமைப்புக்கள் இந்தப் புதிய அரசாங்கத்தின் செயற்பாட்டை விமர்சிப்பதற்காக ஒன்று செர்ந்துள்ளனர்.. எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமது அரசியல் காய் நகர்;த்தல்களைப் புத்திசாதுரிய்யமாக செயற்படுத்துதல் அவசியமாகும்.
அதேபோல மலையகத்திலும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று தோற்றம்பெற்றுள்ளது. இந்த நிலையில் மலைகயத் தோட்ட மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் கட்டம் கட்டமாக தீர்த்து வைக்கப்படுதல் முக்கியமான விடயமாகும். அவர்களுடைய லயன் வாழ்க்கை முறையை இல்லாதொழித்து சகலருக்கும் தம் சொந்தக் காணியில் வீடமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பதற்குரிய வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் அவை துரிதகதியில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
அத்துடன் அவர்களுடைய சம்பளப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து இலங்கையில் வாழும் சகல மக்களுடனும் சமமாக வாழும் நிலையை உருவாக்குவது எமது முக்கிய கடப்பாடாகும். மலையகத்தில் முனைப்புடன் செயலாற்றும் தொழிற் சங்கங்கள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும். அதற்கான புதிய செயற் திட்டத்தை எங்களுடைய புதிய சிவன் தொழிற் சங்கம் பல வேலைத் திட்டங்களை மேற் கொண்டு பல நடடிவக்கைகளை முன்னெடுத்து வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.