முதலமைச்சர் முக்காட்டினுள் மறைந்திருக்கும் மர்மங்கள்!

கிழக்கு மாகாண சபையில் எக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவு ஆசனங்களைப் பெறாததன் காரணமாகவும்,இன்றைய தேசிய அரசியலில் எதிர்க் கட்சி ஆளும் கட்சி என இல்லாத நிலை தோற்றம் பெற்றிருப்பதும் கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சினை நியமிப்பதில் கட்சிகளினுள்ளே அதிக சிக்கல்கள் தோற்றம் பெற்றிருந்தன.

அன்று அனைத்துப் பதவிகளினையும் விட்டுக் கொடுக்க தயாராக இருந்த த.தே.கூ தற்போதைய அரசியல் நிலையினை தங்களுக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தி முதலமைச்சினை தாங்கள் பெற முயற்சித்தமையானது மு.கா முதலமைச்சினைப் பெறுவதில் மிகப் பெரிய சவாலினை எதிர் நோக்கியது.

2012 ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் சுதந்திரக் கட்சியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மு.கா முதலமைச்சினைச் சுவைக்க சு.க ஏனைய கட்சிகளின் கருத்துக்களினை ஏற்காது மு,கா இற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை செய்து கொடுத்தது.இவ்வாறு பல சவால்களிற்கு மத்தியில் பெற்றுக் கொண்ட முதலமைச்சுப் பதவியானது பல சவால்களுக்கு மத்தியில் மு.கா பிரதித் தலைவர் நசீர் ஹாபீசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவ் முதலமைச்சினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டமை,நசீர் அஹ்மதிற்கு வழங்கியுள்ளமை முஸ்லிம் காங்கிரசினுள் பல்வேறு பட்ட பிரச்சினைகளினை கிளறி விட்டுள்ள போதும் அமைச்சர் ஹக்கீம் தன்னை விட தன் கட்சியுள்ள ஒருவர் பெரிய பதவி வகிக்க விரும்புவதில்லை என்ற காரணத்தினால் முதலமைச்சை மு.கா பெறுவதனை தடுக்கிறார் என்ற பழி சொல்லிருந்து தன்னை விடு வித்துள்ளார்.

முதலமைச்சர் விடயத்தில் ஆரம்பத்தில் மு.கா மாகாண சபை உறுப்பினர்களான மன்சூர்,ஜெமீல்,நஸீர் ஹாபிஸ் ஆகிய மூவரும் அதிகம் கட்சியினால் கவனத்திற் கொள்ளப்பட்டப் போதும் இறுதிப் பட்டியலில் தவமும் வந்து இணைந்து கொண்டார்.

கடந்த மாகாண சபையில் வழங்கப்பட்ட அமைச்சினைத் தவிர அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.கா இனால் சம்மாந்துறை ஊரானது பதவி ரீதியாக எச் சந்தர்ப்பத்திலும் பலப்படுத்தப்படாமையினால் சம்மாந்துறை மக்களினை பதவி விடயத்தில் திருப்திப்படுத்தவும்,கட்சியின் சிரேஸ்ட அடிப்படையில் மன்சூர் முதல் இடத்தில் இருந்தமையும்,சம்மாந்துறையினை மையப்படுத்தி அமைச்சர் ஹக்கீம் தேர்தல் கேட்கும் எண்ணத்தில் இருந்தமை போன்ற காரணிகள் மன்சூரிற்கும்,மு.கா இனது இருப்பிற்கு மிகவும் காத்திரமான பங்களிப்பினைச் செய்த ஊர்களில் முதன்மை இடத்தினைப் பிடித்துள்ள சாய்ந்தமருதினை அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.கா இது வரை எது வித பதவிகளினையும் வழங்கி அழகு பார்க்காமை,அண்மையில் வழங்கப்பட்ட அமைச்சானது சில நியாயமான காரணங்களின் அடிப்படையில் கல்முனைத் தொகுதி இற்கு வழங்க வேண்டி இருந்தும் புறக்கணிக்கப்பட்டிருந்தமை,மாகாண சபையில் இரு தடவை தேர்வான அனுபவமிக்க ஒருவர் போன்ற காரணிகள் ஜெமீலிற்கும்,அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாவுல்லாவின் கோட்டைகள் சற்று ஆட்டம் காண ஆரம்பித்திருப்பதால் தவத்தினை பதவி கொண்டு பலப்படுத்தும் போது அதாவுல்லாவினை ஆட்டத்தினைக் குறைக்கலாம் என்ற சிந்தனை தவத்திற்கும்,கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் அம்பாறை.

திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களுக்கும் அமைச்சு,பிரதி அமைச்சு வழங்கி இருந்தமையினால் தற்போது வருகின்ற இப் பதவி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்படல் வேண்டும் என்ற சிந்தனை, கட்சியின் தவிசாளர் பசீர் சேகு தாவூதினை முகம் கொடுக்க மட்டகளப்பு மாவட்டம் பதவி கொண்டு பலப்படுத்தப்படல் வேண்டும் என்பதாலும்,இருப்பவர்களுள் கல்வித் திறமை போன்றவற்றினை ஆராய்ந்து பார்க்கும் போது இவர் முதன்மை நிலை பெற்றமை போன்ற காரணிகள் நசீர் அஹ்மதிற்கும் முதலமைச்சு வழங்கபடுவதற்கு ஆராயப்பட்ட சாதகமான காரணிகளாக இருந்தன.

ஒரு தசாப்த காலமாக தங்களது பாராளுமன்றப் பிரதிநிதித் துவத்தினை இழந்து நிற்கும் சம்மாந்துறை மக்கள் சம்மாந்துறையைச் சேர்ந்த ஒருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதில் குறியாக உள்ளமையினால் அமைச்சர் ஹக்கீம் தேர்தலில் சம்மந்துறையினை மையப்படுத்துவதனை சம்மாந்துறை மக்கள் பொருந்திக் கொள்ள மாட்டார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் மு.கா தனது மரச் சின்னத்தில் தனித்துக் கேட்கவே அதிக சாத்தியம் உள்ளது.தனது சின்னத்தில் தனித்துக் கேட்டால் அமைச்சர் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கினாலும் சம்மாந்துறையினை மையப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

தான் அம்பாறையில் தேர்தல் கேட்டால் கண்டியில் அசாத் சாலி இற்கு பயந்து இங்கு வந்து விட்டதாக அசாத் சாலியும் மக்களும் சேர்ந்து கூக்குரல் இட்டு அதுவே கண்டி மாவட்டத்தில் மு.கா இனை இத் தேர்தலில் நையப் புடைய காரணமாகி விடும் என்பதால் மு.கா தலைவர் அம்பாறையில் களமிறங்கும் எண்ணத்தினைக் கை விட்டமையும்,சம்மாந்துறை மக்களினைத் திருப்திப் படுத்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவமே பொருத்தமானது என அறிந்தமையினால் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை சம்மாந்துறையில் உறுதிப்படுத்தினால் மக்களினை இலகுவாக தங்கள் வசப்படுத்தலாம் எனக் கணக்குப் போட்டமையும் மன்சூரிற்கு முதலமைச்சு வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சாதகமான காரணிகளினை வலு விழக்கச் செய்தது.

அண்மைக் காலங்களில் அமைச்சர் ஹக்கீம் தனது சில காரியங்களினைச் சாதிக்க தவத்தினை துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் மக்களிடையே தோற்றம் பெற்றுள்ளது.ஜனாதிபதித் தேர்தல் ஆதரவு விடயத்தில் மாகாண சபை உறுப்பினர்களினை ஒரு குடையின் கீழ் கொண்டு வர அமைச்சர் ஹக்கீம் தவத்தினையே பயன்படுத்தி இருந்தார்.அம்பாறை மாவட்ட உறுப்பினர்களிடையே பதவிப் போட்டிகள் வலுத்தல் அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே முதலமைச்சினை வழங்குவதற்குரிய சாதகத் தன்மையினை அதிகரிக்கச் செய்யும்.

எனவே,தவத்தின் உள் நுழைவு முதலமைச்சானது அம்பாறை மாவட்டத்தினை விட்டும் வெளிச் செல்வதற்காகவும் இருக்கலாம்.இன்று மு.கா அரசியல் வாதிகள் மக்கள் விரும்பும் பிரகாரம் தங்கள் அரசியல் வாழ்வினைத் தொடர்ந்து தங்கள் பதவிகளினைத் தக்க வைப்பதில் காட்டும் அக்கறையினை விட பன் மடங்கு இன்னுமொருவர் முன்னேற்றத்தினைத் தடுத்து தங்கள் பதவிகளினை தக்க வைக்க முயற்சிப்பதில் அக்கரை காட்டுவது அம்பாறை மாவட்டத்தினை விட்டு முதலமைச்சு பறி போவதற்குரிய மேலுமொரு காரணி எனலாம்.

கட்சியில் தற்போது இணைந்த தவத்திற்கு முதலமைச்சு வழங்கப்பட்டால் அது ஜெமீல்,மன்சூர் ஆகியோரினை மிகவும் நையப்புடைவதாக அமைவது மாத்திரமல்லாது இவர்கள் அதனை ஏற்க மறுத்து போர்க் கொடி தூக்கினால் மக்களும் அவர்கள் பின் அணி திரள்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்பட்டதால் தவத்தினை முதலமைச்சராக நியமிப்பது வயிற்றில் உள்ள பிள்ளையை நம்பி வெளியில் உள்ள பிள்ளையை கொலை செய்வதாக அமைந்திருக்கும்.

தவத்தினை பலப்படுத்த விளைவது அதாவுல்லாஹ் வினை எதிர்க்க என்பது வெளிப்படையானது.ஆனால்,தற்போது மு.கா கிழக்கு மாகாண சபையில் நிறுவப் போகும் ஆட்சி முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினது இரு உறுப்பினர் ஆதரவுடனேயே என்பதால் முதலமைச்சினைத் தீர்மானிப்பதில் அவர்களிற்கும் சிறு பங்கு உண்டு.

இதன் போது தங்கள் அரசியல் வாழ்வினைக் கருத்திற் கொண்டு இவர்கள் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவதனை விரும்பி இருக்க மாட்டார்கள்.அதிலும் குறிப்பாக இவர்களது அரசியல் வாழ்வு முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவில் தங்கி இருப்பதால் அவரின் அரசியலில் அதிக எதிர்த் தாக்கத்தினை செலுத்தக் கூடிய தவத்தினை பதவி கொண்டு பலப்படுத்துவதினை ஒரு போதும் விரும்பி இருக்க மாட்டார்கள்.

மு.கா ஆனது ஆட்சியமைக்கப் போதுமான அளவு ஆசனங்களை சு.க இனது ஒத்துழைப்போடு பெற்றமையினாலேயே வேறு வழி இன்றி ஏனைய கட்சிகளும் மு.கா உடன் தற்போது இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சு.க உறுப்பினர்களில் அதாவுல்லா அணியின் இருவரும் மு.கா ஆட்சியமைப்பினை எதிர்த்தால் மு.க ஆட்சியமைப்பதில் மிகப் பெரிய சவாலினை எதிர் நோக்கி இருக்கும் என்பதனை மறுக்க முடியாது.

சாய்ந்தமருதில் மு.கா இனை எதிர்த்து அரசியல் செய்ய ஒரு பலமிக்க சக்தி இல்லை என்பதால் முதலமைச்சினை அங்கு வழங்குவது மு.கா இனது வளர்ச்சிக்கு எது வித பங்களிப்பினையும் செய்யப்போவதில்லை.என்ன செய்தாலும் மு.கா இனை அவர்கள் ஆதரித்தே ஆக வேண்டும்.

இவை ஜெமீலிற்கு முதலமைச்சு வழங்குவதற்கான சாதகத் தன்மையினை குறைத்திருந்தது.கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பர் நீர் வளங்கள் அதிகார சபையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை ஜெமீலினை முதலமைச்சு விடயத்தில் புறக்கனிப்பதற்கான சைகையே என பலரும் ஆரூடம் கூறி இருந்தமையும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.

முடிவெடுக்கும் அதிகாரம் பொதுவாக அதீத வாதப் பிரதி வாதங்களினைத் தொடர்ந்து தலைவரிடம் வழங்கப்படுவதே இற்றை வரை நடை பெற்று வந்த போதும் இவ் விடயத்தில் ஆரம்பத்திலேயே மு.கா தலைவரிடம் முடிவெடுக்கும் அதிகாரம் சென்றது.

மு.கா தலைவரும் தனது வழமையான பாணியில் இன்று சொல்வேன் நாளை சொல்வேன் என காலத்தை கடத்தி குதிரையோ கழுதையோ யாரையாவது சொல்லட்டும் என்ற நிலைமைக்கு உறுப்பினர்களையும் போராளிகளினையும் கொண்டு வந்தார்.மு.கா தலைவரின் கால தாமதம் மக்களை அதிருப்திக்குள்ளாக்கி இருப்பினும் மு.கா போராளிகளினை கட்சியில் நிலைத்திருக்க பெரிதும் உதவின.

இவ்வாறான திறமை மிகு மு.கா தலைவரினது சானக்கியங்களாளேயே கட்சியினை இற்றை வரை பாதுகாக்க முடிந்துள்ளது எனலாம்.

இறுதியில் நசீர் அஹ்மதினை முதலைச்சராக நியமிக்கவுளேன் என்ற தனது கருத்தினை மு.கா தலைவர் வெளிப்படுத்திய போது முதலமைச்சர் தனக்கே கிடைக்கும் அல்லாது போனாலும் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்த ஜெமீலிற்கு அது பலத்த ஏமாற்றத்தினைக் கொடுத்தது.

அமைச்சு விடயத்தில் கல்முனைத் தொகுதி புறக்கணிக்கபட்டிருந்தமை முதலமைச்சிற்காகவா என கல்முனைத் தொகுதி மக்களை அவா கொள்ளச் செய்திருந்தமையினால் அமைச்சரின் இம் முடிவைப் பொருந்திக் கொள்ள மறுத்த சாய்ந்தமருது மக்கள் போர்க் கொடி தூக்கினர்.இப் போர்க் கொடி முன்னொரு போதும் இல்லாத அளவு மிகவும் உணர்ச்சி வசப்பட்டதாக அமையப் பெற்றிருந்தமையினை அவதானிக்க முடிந்தது.தற்போது மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மீண்டும் தனது தாயகமான மு.கா இனை வந்தடைந்துள்ளார்.

முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாகிபின் செயற்பாடு,தனி உள்ளூராட்சி சபைக் கோரிக்கை போன்ற காரணங்களினால் மு.கா இன் செயற்பாடுகளின் மீது சாய்ந்தமருது மக்கள் அதிருப்தியுற்றிறுப்பது பலரும் அறிந்ததே.இவ்வாறன சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படும் இச் செயற்பாடுகள் சாய்ந்தமருது மக்களினை மென் மேலும் வெறுப்பிற்கு உள்ளாக்கும்.இது மு.கா இனது தொடர்ச்சியான நிலவுகைக்கு அவ்வளவு உசிதமானது அல்ல.

ஹக்கீம் ஒரு போதும் ஜெமீல் தன்னை இவ்வாறு எதிர்ப்பார் என சிறிதேனும் நினைத்திருக்க மாட்டார்.சாய்ந்தமருதில் நிஜாமுதீன் பிரிந்த போது அவரினை எதிர் கொள்ள ஜெமீல் இருந்தார்.சிராஸ் பிரிந்து சென்ற போதும் அதனை எதிர் கொள்ள ஜெமீல் இருந்தார்.

ஆனால்,ஜெமீல் தற்போது ஹக்கீமினை எதிர்த்த போது மு.கா சார்பாக பெயர் சொல்லி குறிப்பிடும் அளவான ஒருவர் சாய்ந்தமருதில் இல்லை என்ற காரணத்தினால் இதனை முன் கூட்டியே ஹக்கீம் அறிந்திருந்தால் சற்று வேறு விதமாக இதனைக் கையாளவே முயற்சித்திருப்பார்.

மு.கா ஆட்சி அமைத்தலில் விருப்பம் கொள்ளாத கட்சிகளான த.தே.கூ இல் 11 உறுப்பினர்கள்,ஐ.தே.க இல் 4 உறுப்பினர்கள்,அ.இ.ம.கா இல் 3 உறுப்பினர்கள் என மொத்தமாக 18 உறுப்பினர்கள் இருந்தனர்.ஜெமீலும் சென்றால் மு.கா இனால் ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்கள் இல்லாத நிலை தோன்றும் என்பதனால் மு.கா இற்கு ஒரு பலமிக்க அழுத்தத்தினை வழங்க ஜெமீல் எதிரணியுடன் பேசுவது போன்ற ஒரு விம்பத்தைத் தோற்றுவித்தார்.ஆனால்,அவர் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டாப் போல் சிப்லி பாரூக்,அலி சாகிர் மௌலானா ஆகிய இருவரும் மு.கா இற்கு ஆதரவாக மாறினர்.

சில சட்டப் பிரச்சனைகளினாலேயே இவர்கள் உத்தியோக பூர்வமாக தங்கள் கட்சி மாற்றத்தினை அறிவிக்க வில்லை என மு.கா முக்கிய புள்ளிகள் உறுதிப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களினது ஆதரவு ஜெமீலினது எதிர்ப்பு செயற்பாடுகலிருந்து மு.கா இனை மீண்டும் உறுதியான நிலைக்கு கொண்டு சென்றது.

முதலமைச்சராக நசீர் அஹ்மதினை நியமித்தததற்கு ஹக்கீமினால் முன் வைக்கப்பட முடியுமான பதில்களில் ஒன்று பசீர் சேகு தாவுதை நலிவாக்க மட்டக்களப்பிற்கு அதிகாரம் வழங்கப் படல் வேண்டும் என்பதாகும்.பசீர் சேகு தவூதினை ஏன் நலிவாக்க விரும்புகிறார் என்ற வினாவினை எழுப்பி விடை பெற்றால் அவ் அனைத்துக் குற்றச் சாட்டுகளும் நசீர் ஹாபிசிற்கும் பொருந்தும்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பதவி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றால் மட்டக்களப்பபு மாவட்டத்தில் உள்ள ஏனைய மாகாண சபை உறுப்பினருக்கு வழங்கி இருக்கலாமே? கல்வித் தகமை பார்த்து முதலமைச்சினை வழங்க வேண்டும் என்றால் வேட்பாளர்களை கல்வித் தகமை பார்த்து மு.கா தேர்தலில் களமிறக்கி இருக்க வேண்டும்.எனவே,மன்சூர்,ஜெமீல் ஆகிய இருவரும் முதலமைச்சு விடயத்தில் புறக்கணிக்கப்பட்டமை நியாயமான காரணங்களினால் அல்ல என்பது வெளிப்படையானது.

தற்போது மலர்ந்துள்ள இவ் நல்லாட்சியில் எது வித பங்களிப்பினையும் செய்யாத நசீர் ஹாபிஸ் இற்கு இப் பதவி வழங்கப்பட்டுள்ளமையானது மு.கா ஆதரவாளர்களினை சற்று அதிருப்திக் குள்ளாக்கி உள்ளது.

மேலும்,இவ் முதலமைச்சு விடயத்தில் அ.இ.ம.கா இற்கு மு.கா குறித்த இடம் வழங்கும் என்ற நம்பிக்கையில் அ.இ.ம.கா இருந்தது.ஆனால்,மு.கா ஆனது அ.இ.ம.கா இனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் தனது காய் நகர்த்தல்களை கச்சிதமாக மேற்கொண்டு முதலமைச்சினை பெற்றுக் கொள்ள முயற்சித்தது.

இது அ.இ.ம.கா இற்கு மிகவும் வெறுப்பினை ஏற்படுத்தியது.இதுவே ஜெமீலின் கணக்கிற்கு சாதகமாகவும் மாறியது.மு.கா ஆனது அ.இ.ம.கா இனைப் புறக்கணித்தமை மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாரூக்,அலி சாகிர் மௌலானா ஆகிய இருவரும் மு.கா இற்கு ஆதரவாக செயற்படப் போகிறார்கள் இதனால் அ.இ.ம.கா இடம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்பதனை அறிந்ததன் வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது மட்டக்களப்பிற்கு முதலமைச்சினை வழங்கப் போகிறோம்,இதன் போது அ.இ.ம.கா இற்கும் ஒரு பலமிக்க அடியினை வழங்கி வீழ்த்த வேண்டும் என்ற கணக்கினை மு.கா போட்டிருக்கலாம்.

ஏனெனில்,.அ.இ.ம.கா இனோடு பேச்சு நடாத்தினால் அவர்களுக்கும் ஏதாவது பதவி வழங்க வேண்டும் அவர்களினைப் புறக்கணித்தால் அவ்வாறான தொரு நிலை வராது.அவர்கள் ஆதரவு இன்றியும் ஆட்சியமைக்க முடியும் என்ற நம்பிக்கை மு.கா இருந்தது.எனவே,மட்டக்களப்பினையும் இதனை வைத்து தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரலாம் என்ற கணக்கைப் போட்டது.

முதலமைச்சு அறிவிப்பினைத் தொடர்ந்து இடம் பெற்ற ஜெமீலின் செயற்பாடு மு.கா இன் முதலமைச்சுக் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது.இச் சந்தர்ப்பத்தில் சிப்லி பாரூக் அமைச்சர் ரிஷாத் த.தே.கூ உடன் இணைந்து தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க போகிறார் என்ற போர்வையில் மு.கா உடன் இணைந்து கொண்டார்.ஜெமீலின் செயற்பாடு சிப்லி பாரூக் அ.இ.ம.கா இனை எதிர்க்க நல்லதொரு காரணியை விளைவாக்கியது.

முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சினை அறிவித்தமை த.தே.கூ இற்கு பலத்த ஏமாற்றத்தினையும் ஐ.தே.க இற்கு சற்று வெறுப்பினையும் ஏற்படுத்தியது.இதனால் இரு அணிகளினதும் செயற்பாடுகள் மு.கா இற்கு எதிராக மாறியது.இதன் மூலம் வரும் பிரச்சனைகளினை முகம் கொடுக்க மு.கா நசீர் ஹாபிசினை உடனடியாக பதவி ஏற்கச் செய்தது.இவ்வாறு செய்தால் இதன் மூலம் வரும் பிரச்சனைகளினை சு.கா யும் உறுதியாக நின்று முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதாகும்.தேசிய அரசியல் நிலை இதற்கு உதவியாகவும் அமையும்.

எது எவ்வாறு இருப்பினும் ஐ.தே.க இனது எதிர்காலப் பயணத்திற்கு முஸ்லிம்களினை எதிர்க்க முடியாது என்பதே உண்மை.ஐ.தே.க ஆனது த.தே.கூ உடன் இணைந்து மு.கா முதலமைச்சினை தடுத்தாலும் ஒரு போதும் ஐ.தே.க இனைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவதனை த.தே.கூ விரும்பாத படியினால் தமிழ் இனத்தினைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வரும் நிலை தான் இருந்தது.ஐ.தே.க ஆனது முஸ்லிம்களிடம் தற்போது ஓரளவு செல்வாக்குச் செலுத்தி வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் ஐ.தே.க மீது முஸ்லிம்களிற்கு வெறுப்பினை ஏற்படுத்தும் என்பதால் தற்போது தனது வீரியச் செயற்பாட்டினைக் குறைத்து மு.கா உடன் இணைந்து தேசிய அரசியலினை முன்னெடுக்க விருப்பம் காட்டுகிறது.

மேலும்,எதிர்காலத் தேர்தல்களில் மு.கா ஆனது ஐ.தே.க உடன் இணைந்தே தேர்தல் கேட்க உள்ளதால் பொது அணிக் கூட்டுகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஐ.தே.க பிரதமர்ப் பதவியினை அடைந்து கொள்ள மு.கா உதவப் போகிறது என்பது மறைமுகமான அர்த்தம்.எனவே,இதில் மு.கா இற்கு சார்பாக இருப்பது ஐ.தே.க இற்கு தவறில்லை..

ஏனைய கட்சிகளினைப் புறக்கணித்து இவ் முதலமைச்சினை நியமித்ததானது சு.க இனது அதிகாரத் தன்மையினை சற்று வெளிப்படுத்துவதாக அமைகின்றது.இது தேசிய அரசியலிற்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு செயற்பாடாகும்.த.தே.கூ ஆனது மு.கா முதலமைச்சினை எதிர்த்தாலும் முதலமைச்சு கிடைக்கப் போவதில்லை எதிர்க் கட்சியிலேயே அமர வேண்டும் என்பதால் மக்களிடையே தங்களது மானத்தினைக் காப்பாற்றிக் கொள்ள மு.கா உடன் இணைந்து செல்வதே பொருத்தமானதாகும்,எனினும்,எதிர் கால அரசியல் செயற்பாடுகளிற்கு மத்திய அரசில் அவர்கள் இருப்பது போல் பதவிகளினை ஏற்காமல் விடுவதே த.தே.கூ இற்கு சிறந்தது.

இந்த முதலமைச்சர் பதவி எத்தனை நாளைக்கு..?? இந்தக் கூட்டு எத்தனை நாளைக்கு சாத்தியம்..?? எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறி பாலடி சில்வா ரணிலை பிரதமராக்க முடியாது என கூக்குரல் இடுகிறார்.ரணிலோ பிரதமராவதில் தான் குறியாக உள்ளார்.மு.கா சோ ஐ.தே.க உடன் தேர்தல் கேட்கப் போவதாக அறிவித்துள்ளது.

இங்கோ சு.க இனது பூரண ஒத்துழைப்போடு ஆட்சி அமைத்துள்ளது.சில வேளை இப் பாராளுமன்றத் தேர்தலின் பிற்பாடு இக் கூட்டுகளினுள் பாரிய பிளவுகள் ஏற்படலாம்.அந்தப் பிளவுகள் மாகாண சபையிலும் அதிக தாக்கத்தினைச் செலுத்தும்.

இந்தப் முதலமைச்சர்ப் பதவிற்கான இத்தனை பிரயத்தனங்களும் எதிர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலினை முன் வைத்தே ஆக வேண்டும்.முதலமைச்சர் பதவிக்காகா கருத்திற் கொள்ளப்பட்ட அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த மூவரும் மு.கா தனித்து தேர்தல் கேட்கும் போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டி இடுவார்கள் என்பது உறுதியானது.

இன்னும் சிறு காலமே பாராளுமன்றத் தெர்தலிற்கு உள்ளதால் இச் சந்தர்ப்பத்தில் முதலமைச்சராவது அதிக பிரபலத்தினை ஏற்படுத்தும்.இது பாராளுமன்றத் தெர்தலிற்கான வெற்றி வாய்ப்பை சாதகமாக்கும்.இது இல்லாது போனாலும்,மாகாண சபை எப்போது கலைக்கப்பாட்டாலும் இப் பதவி வெற்றி வாய்ப்பிற்கு மிகவும் உறுதுணையாக அமையும்.

இப் பதவி மட்டக்களப்பிற்கு வழங்கப்பட்டுள்ளமையானது அமைச்சர் பசீரிற்கு மாத்திரம் ஆபத்தானது அல்ல முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கும் அதிகம் சவாலானது.

இன்று அ.இ.ம.கா மட்டக்களப்பினையும் தாண்டி அம்பாறையில் காலடி வைக்கப் போகிறது.எனினும்,இதன் கிழக்கு அடித்தளம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியில் தான் உள்ளது.அ.இ.ம.கா இனது அம்பாறை தடம் பதிப்பினைத் தடுக்க அ.இ.ம.கா இனது மட்டக்களப்பு நுழைவாயிலை மூடுவது சரியான யுத்தியாக அமையும்.இதற்கு சிப்லி பாரூக்கின் ஆதரவு,இப் பதவி மு.கா இற்கு மிகவும் உறுதுணையாக அமையும்.


10.02.2016 நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்விற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.இவ் அமர்வில் தயா கமகே மு.கா தலைவரினை விமர்சிக்க எத்தனித்த போது சிறு சல சலப்பு ஏற்பட்டுள்ளது.தயாவின் மு.கா மீது வெறுப்பிற்கு பல காரணங்கள் உள்ளன.சுயேட்சையில் தனித்துக் கேட்டிருந்தாலும் தாயா கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 

மூலம் பாராளுமன்றம் சென்றிருப்பார்.இவரின் பாராளுமன்ற செல்கைக்கு மு.கா கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சவாலாக அமைந்தது.இவர் தற்போது ஐ.தே.க இனது தேசிய அமைப்பாளராக உள்ளதால் தன் மானத்தினைக் காப்பாற்றிக் கொள்ள இம்முறை எப்படியாவது பாராளுமன்றம் தேர்வாக வேண்டும்.அதிலும் குறிப்பாக அதிக வாக்குகளைப் பெற்று மாகாணத்தில் முதன்மை இடத்தினைப் பெறுவதே தேசிய அமைப்பாளர் பதவிற்கு பொருத்தமானது.இதற்கு மு.கா பெரும் சவாலாக உள்ளமையே இவரின் வெறுப்பிற்கான பிரதான காரணி எனலாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -