தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் ஆளுக்கொரு கருத்தையும் ஒன்றுக்கொன்று முரணாக பேசுவதையும் ஒருவரே முன்னொரு பேச்சும் பின்னொரு பேச்சும் பேசுவதால் கூட்டமைப்புக்குள்ளேயே முரண்பாடுகள் தோன்றியுள்ளன. ஆட்சி மாற்றம் நடந்து ஒரு மாதத்திலேயே தாமே உருவாக்கியதாக கூறும் அரசை தாமே பகை உணர்வுகொட்டி திட்டி தீர்க்கிறார்கள். இத்தகைய சூழலில் தமிழ்பேசும் மக்களை பிழையாக வழிநடத்தியமைக்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-
தற்போது ஆட்சி அமைத்துள்ள புதிய அரசாங்கத்திற்கு தமிழ் மக்களை வாக்களிக்க சொன்ன தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கத்திற்கு மாறான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றது.
தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாக்களிக்க செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
எமது கட்சியினைப் பொறுத்தவரையில் நாம் நீண்ட கால அரசியல் போராளிகள். எனவேதான் மாற்றத்தினை விரும்பும் மக்களுக்கு மாற்றுத் தலைமையினைக் கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் தமிழ் மக்களின் விடிவுக்காக போராட முன்வந்துள்ளோம்.
எங்களுடன் கைகோர்ப்பதற்கு பல முற்போக்கு கட்சிகள், பொது அமைப்புக்கள் தயாராக உள்ளன. அவர்களுடைய விபரங்களை தற்போது வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது.
இதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீணைச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலுவான பொது கூட்டணி ஒன்று இணையுமாக இருந்தால் தமது முடிவு தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் சம்பந்தமாக முற்போக்கு சக்திகள், பொது அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 1970 ஆண்டில் இருந்து இன்றுவரை இங்கு நடைபெற்ற அனைத்து அரசியல் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டும். அதற்கு தேவையான அழுத்தங்களை வழங்குவதற்கும் நாம் தயாராக உள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கேசரி