எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடும். எனவே, ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட விரும்பும் கட்சிகளுக்குத் திறந்த அழைப்பை விடுகின்றோம்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது நெடுஞ்சாலைகள், உயர்கல்வி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துக் கூறுகையில், "எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு காணாத வெற்றிபெறவுள்ளது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க சில கட்சிகள் முயற்சிசெய்து வருகின்றன.
அவ்வாறு அவர் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக அமையும் எனக் கூறமுடியாது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடையும் எனத் தெரிவித்தனர்.
நாங்கள் மக்களின் வாக்குப் பலத்தால் பதில் கொடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றோம். ஆகவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் வெற்றிபெறுவது நிச்சயம். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு சவாலாக இருந்த மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்.
அவ்வாறான நிலையில், இந்தப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் ஒரு சவால் அல்லர். ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு இலஞ்சம், சலுகைகள் வழங்கி வாக்குகளைப் பெற்றது மாத்திரமன்றி, மக்களை அச்சுறுத்தி தொடர்ந்தும் இந்நாட்டில் அராஜக ஆட்சியை செய்ய திட்டமிட்டிருந்தனர்.
அவற்றுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளமை தற்போது வெளிச்சமாகியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சில பிரதேசங்களிலேயே தோல்வியடைந்தது. அதுவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே. ஆனால், இம்முறை பொதுத் தேர்தலில் இந்நிலைமையும் மாறும். அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்'' - என்றார்
