வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இனவாதத்தை தூண்டி நன்மை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது தவறானது என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.விக்னேஸ்வரன் அவ்வாறு செய்வது நியாயமற்றது.
தரைவழி போரை நானே வடிவமைத்து திட்டமிட்டேன், படையணிகளுக்கு நானே உத்தரவு பிறப்பித்தேன். கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு நானே ஆணை வழங்கினேன். இந்த போராட்டத்தை நன்றாக கண்காணித்தேன்.
எனவே, மனித படுகொலைகள் இடம்பெறவில்லை என்பது எனக்குத் தெரியும். சிவில் மக்களை பாதுகாக்க நாம் முன்னின்று செயற்பட்டோம். 275,000 மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தோம். சிவில் போர்களின் போது பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது என்ற போதிலும் எல்லா காரணிகளையும் கருத்திற் கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்நோக்கில் போர் செய்தோம்.
விக்னேஸ்வரன் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சித்தால் அதனையிட்டு நான் வருந்துகின்றேன். வடக்கு மக்களின் நலனில் விக்னேஸ்வரன் கரிசனை கொண்டிருந்தால், தெற்கு மக்களின் மனதில் சந்தேகம் எழக்கூடிய வகையில் செயற்படக் கூடாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
