கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து அமைச்சரவையில் பங்கேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு அமைச்சுப் பொறுப்புக்கள் மற்றும் ஒரு பிரதி தவிசாளர் பதவியை ஏற்றுக் கொள்ள முஸ்லிம் காங்கிரஸுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
எனினும் யார் யாருக்கு எந்தெந்த பதவிகளை வழங்குவது என்பது தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் உள்ள 11 உறுப்பினர்களும் கட்சித் தலைமையும் கூடி முடிவெடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதுவிடயம் தொடர்பாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது, கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் தண்டாயுதபானியை தொடர்புகொள்ளுமாறு அவர் கோரினார்.
அதன்படி, தண்டாயுதபானியிடம் வினவிய போது, அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும் சாத்தியம் உள்ளதெனவும் இன்னும் இரண்டு நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.