தேசிய பிரச்சினைகளை தாண்டி ஒன்றுபட்ட இலங்கையினை கட்டி யெழுப்பும் ஒரே நோக்கத்திற்காகவே தேசிய அரசாங்கத்தினை அமைத்து ஆட்சி நடத்துகின்றோம். சிங்கள பௌத்த உரிமைகளைப் போல் தமிழரின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கிடைத்திருக்கும் வாய்ப்பினை மீண்டும் சர்வாதிகாரிகளின் கைகளில் கொடுத்து நல்லாட்சியின் பாதையினை மாற்றியமைக்க நாம் தயாரா... எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சி பீடத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஹெல உறுமய அங்கம் வகிக்குமா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
கடந்த காலங்களில் நாடு சர்வாதிகாரத்தின் பக்கம் சென்று கொண்டிருந்தது. ஒரு குடும்பத்திற்கு எதிரான மாற்று கருத்துக்களுக்கு இடம் இருக்கவில்லை. எனினும் யுத்தத்தினை வெற்றி கொள்ளவும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. ஆனால், இன்று நாட்டில் குழப்பகரமானதொரு சூழ்நிலை இல்லை. பயங்கரவாதத்திற்கு இடம்இல்லை. பிரிவினையினை எதிர்பார்த்து செயற்பட்டவர்கள் பலர் இன்று நல்லாட்சியினை விரும்புகின்றனர்.
பிரிவினைவாதிகளே ஒன்றுபட்ட நாட்டினை விரும்பும் நேரத்தில் பௌத்த சிங்கள உரிமைகளை மதிக்கும் நாம் பிரிவினைவாதத்தினை தோற்றுவிக்கும் வகையில் அல்லது இறுக்கமான போக்கினை கையாள்வது அர்த்தமற்ற செயற்பாடாகும். எனவே தேசிய அரசாங்கத்தினை பலப்படுத்தியமையும் தேசிய அரசாங்கத்தினை தொடர்ந்து கொண்டு செல்ல முயற்சிப்பதும் தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவே. எனவே, மூவின மக்களையும் ஒன்றிணைத்து ஆட்சி நடத்துவதையே பெரும்பான்மையின மக்கள் விரும்புகின்றனர்.
மேலும், இந்த நாட்டில் சிங்கள பௌத்த உரிமைகளுக்கு எவ்வித பங்கமும் ஏற்படக்கூடாது. சிங்கள கொள்கைகள் அழிக்கப்படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்கப்போவதில்லை. ஆனால், ஏனைய மதங்களினதும் இனத்தவரினதும் உரிமைகள் அழிக்கப்படக்கூடாது. தமிழர்களும் முஸ்லிம்களும் சுதந்திரமாக வாழ வேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் மக்கள் சுதந்திரமாக வாழும் ஆட்சி அமைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் மீண்டும் இனவாதிகளின் கைகளில் ஆட்சியினை கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கமாட்டோம். அதற்கான சந்தர்ப்பம் இனி ஒருபோதும் வராது எனவும் அவர் தெரிவித்தார்.-ஏமு