வடமேல் மாகாணம் பெரும்பான்மை இன மக்களை அதிகம் கொண்ட ஒரு மாகாணம். அங்கு சேவைகள் செய்தாலும் பெரும்பான்மை இன மக்களுக்கே சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கே முன்னுரிமையும் வழங்க வேண்டும். இதற்காகவா முஸ்லிம் மக்கள் நஸீர் ஹாபிஸுக்கு வாக்களித்து, மக்கள் பிரதிநிதியாக்கினார்கள். வடமேல் மாகாணத்தில் தகுதியான முஸ்லிம் அதிகாரி ஒருவர் இருந்து, அவரை நஸீர் ஹாபிஸ் உரிய பதவியொன்றுக்கு நியமித்தாலும், அது பாரிய இனவாதமாக உருவெடுக்கும். இப்படி இந்த பதவி மூலம் முஸ்லிம் சமூகம் பெரிதான எந்த இலாபத்தையும் பெறப்போவதில்லை. தேவையென்றால் புத்தளம் மற்றும் குருநாகலில் உள்ள முஸ்லிம்களின் சிறு சிறு தேவைகளை நிறைவேற்றலாம். அங்கு பெரிதாக எதனையும் கிழிக்க விட மாட்டார்கள். முஸ்லிம்களுடைய ஓரிரு விடயங்களை சாதிக்கலாம். அதனையாவது சாதிக்க வேண்டும்.
நஸீர் ஹாபிஸுக்கு வாக்களித்த மக்கள் கிழக்கு மாகாணத்திலேயே உள்ளனர். அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதே நஸீர் ஹாபிஸின் கடமை. அந்த மக்கள் அளித்த வாக்குகளே, இப் பதவியை நஸீர் ஹாபிஸுக்கு வழங்கியுள்ளது. இதுவெல்லாம் மறுக்க முடியாத உண்மைகள். தனக்கு ஆளுநர் பதவி வேண்டும் என அடம்பிடித்ததை போல, கிழக்கு மாகாண ஆளுநர் தான் வேண்டும் எனவும் அடம் பிடித்திருந்தால், நஸீர் ஹாபிஸை மெச்சியிருக்கலாம். எமது சமூகத்தின் தாகத்தை ஓரளவு தீர்க்க முனைந்திருக்கலாம். தானும் உயரிய பதவியோடு, பந்தாவாக சுற்றியிருக்கலாம்.
நஸீர் ஹாபிஸ் ஏற்கனவே கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தவர். இவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை வழங்குவது பொருத்தமானது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இராது. ஓரளவு சமூகத்தின் பிரச்சினைகளையும் தீர்க்க முனைந்திருப்பார். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்துவிடுவார் என்பதனாலேயே, அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வழங்கப்படவில்லை என்றால் அது தவறாகாது என நம்புகிறேன். தனக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்காத பதவி எதற்கு, தனக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடாது என சிந்திக்கும் தலைமையின் பின்னால் நின்று தான் சமூகத்துக்கு ஏது இலாபம் கிடைத்து விடப்படுகிறது.
தற்போது நஸீர் ஹாபிஸுக்கு கிடைத்துள்ள ஆளுநர் பதவியானது முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வித இலாபத்தையும் சேர்க்கப்போவதில்லை. அது சிறிதும் எமது சமூகத்திற்கு உதவபோவதுமில்லை. அவர் உயர் பதவியொன்றோடு ராஜவாக சுற்றலாம். பதவி கிடைத்தால் சுற்றி வரும் எமது சமூக பதறுகள் அவரை சுற்றி வளைக்கலாம். மீண்டும் தனது சுயநலத்தை முன்னிறுத்தியே நடந்துள்ளார் என்பதையே இவ் விடயம் துல்லியமாக்கின்றது. எமது சமூகத்தின் மிக முக்கிய தேவை கிழக்கு மாகாண ஆளுநர் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவதை பொருத்தமாக கருதுகிறேன்.
மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
0 comments :
Post a Comment