மாவட்டம் தோறும் விஷேட தேவையுடைய சிறார்களுக்கான தனியான பாடசாலை உருவாக்கப்பட வேண்டுமென சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (சிடா ஸ்ரீலங்கா) கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது
சிடா ஸ்ரீலங்கா என்ற அமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டின் பல மாவட்டங்களில்; பிறப்பால் மற்றும் குழந்தைப் பருவ சில நிகழ்வுகளினால் உடல், உள குறைபாடுகளுக்குள்ளான விஷேட தேவையுடையோர் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்பட்ட சிறுவர்கள் பலர் உள்ளனர்.
இச்சிறுவர்களுக்கான அடிப்படை வசதிகள் நிறைவு செய்து கொடுக்கப்படுவதில் பெற்றோர்களும் சமூக அமைப்புக்களும் அக்கறை கொள்வது இன்றியமையாதது. குறிப்பாக இத்தகைய சிறார்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படுவது மற்றும் இக்கல்வி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவது பெற்றோரினதும்; கல்விச் சமூகத்தினதும் கல்வி அமைச்சினதும் பொறுப்பாகும்.
ஒரு சில பிரதேசங்களில் இத்தகைய விஷேட தேவையுடையவர்களுக்கு கல்வி வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் அவை முறையான பொறிமுறையுடன் அமையாது காணப்படுகிறது.
அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட பல பிரதேசங்களிலுள்ள விஷேட தேவையுடைய அநேகமான சிறார்கள் ஆரம்பக் கல்வியைக் கூட கற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைக்காதவர்களாகவே உள்ளனர். ஒரு சில விஷேட தேவையுடைய சிறார்கள் மற்றவர்களிடம் கையேந்தி வாழக் கூடிய நிலைக்கு தள்ளப்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
இத்தகைய சிறுவர்களுக்கு கல்வி உரிமை வழங்கப்படுவதோடு அவர்களும் அவர்கள் வாழும் சமூகத்தில் ஒரு சமூகப் பிரஜையாக மதிக்கப்படுவதற்கு அவர்களுக்குரிய கல்வி வாய்ப்பு இன்றியமையாததாகும்.
இத்தகைய விஷேட தேவையுடைய சிறார்களின் எதிர் கால நலன் கருதி அவர்களின் வாழ்வை வசந்தமாக்குவதை இலக்காகக் கொண்டு விஷேட தேவையுடைய சிறார்களுக்கான பாடசாலையொன்றை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (சிடா ஸ்ரீலங்கா) கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
.jpg)