கடந்த 2010ம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா, ஆளுந்தரப்பு வேட்பாளரைவிட 29,000 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். மாவட்டத்திற்குள்ளே நுவரெலிய-மஸ்கெலிய தொகுதியில், ஆளுந்தரப்பு வேட்பாளரைவிட பொது வேட்பாளரின் பெரும்பான்மை 50, 262 வாக்குகளாக இருந்தது. இம்முறை நுவரெலிய-மஸ்கெலிய தொகுதியை ஒரு இலட்சம் வாக்குகளாலும், நுவரெலிய மாவட்டத்தை குறைந்தபட்சம் 75,000 வாக்குகளாலும், எமது எதிரணி வெற்றிக்கொள்ளும். இது திண்ணம்.
இதற்கு காரணம் ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல், பாராளுமன்ற, மாகாணசபை தேர்தல் அல்ல, இது தேசிய தேர்தல் என்றும், இதிலே எவர் என்ன சொன்னாலும், எந்த கட்சி எங்கே நின்றாலும், எங்கள் தெரிவு அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என்றும் நுவரெலியா மாவட்ட மக்கள் முடிவு செய்துவிட்டதை அங்கிருந்து வரும் செய்திகள் எங்களுக்கு தெரிவிக்கின்றன என மலையக தேர்தல் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக முன்னணியின் உப தலைவர் மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார் கண்டியில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நுவரெலிய மாவட்டம் மட்டுமல்ல, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினைபுரி, கேகாலை,காலி, களுத்துறை மாவட்டங்களின் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியையும் சார்ந்த பெருந்தோட்ட வலயங்களில் வாழும் தமிழ் தொழிலாளர்களின் வாக்குகள்,ஆட்சி மாற்றத்தை நோக்காக கொண்டு எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும். அதேபோல் இந்த வாக்குகளுடன் தோட்டப்புறங்களுக்கு வெளியே மலையக நகரங்களிலும், கொழும்பு, கம்பஹா,புத்தளம் மாவட்டங்களின் நகர பகுதிகளிலும் வாழும் தமிழர்களின் வாக்குகளும் ஆட்சி மாற்றத்தை நோக்காக கொண்டு எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் வடகிழக்கிலும், தென்னிலங்கையிலும் தமிழர்களின் ஜனத்தொகை ஏறக்குறைய சமானமாகவே இருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் ஜனத்தொகை சுமார் பதினாறு இலட்சமாகும். வடகிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களின் தொகை சுமார் பதினைந்தரை இலட்சமாகும். தென்னிலங்கையில் ஏறக்குறைய பத்து இலட்சம் தமிழர் வாக்குகள் உள்ளன.
இது இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கு பாரிய பங்களிப்பை தரகூடிய பெரிய ஒரு வாக்கு தொகையாகும். இந்த வாக்குகளில் மிகப்பெரும்பான்மையை திரட்டி எமது பொது வேட்பாளருக்கு தருவது எமது கடப்பாடாகும்.
இதில் அதிகமான தமிழ் வாக்காளர்களை கொண்ட மாவட்டம் நுவரெலிய மாவட்டமாகும். எனவே இந்த மாவட்டத்தை வெற்றிக்கொள்வது கட்டாயமாகும். எதிரணியிலே இன்று தொழிலாளர் தேசிய முன்னணியும், மலையக மக்கள் முன்னணியும் இணைந்து கொண்டுள்ளன. இது எதிரணியின் ஒட்டு மொத்த சக்தியை அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்ல,எதிரணிக்குள்ளே நமது இனத்தின் சக்தியை அதிகரித்து, நமது மூன்று கட்சிகளும் ஒரு கூட்டாக செயற்படக்கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நோக்கத்துடனேயே, இந்த மலையக கட்சிகளை எதிரணியில் கொண்டு வந்து சேர்ப்பதில் நான் கூடிய அக்கறையுடன் பங்காற்றினேன்.
நமது கூட்டு செயற்பாடு இன்று முழுநாட்டில், குறிப்பாக நுவரெலியாவில் வாழும் நமது மக்கள் மத்தியில் ஒரு பாரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையக இளைஞர்கள் நம்மை தினந்தோறும் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள்.
எவர் என்ன சொன்னாலும், எந்த கட்சி எங்கே நின்றாலும், அன்னப்பறவை சின்னத்தின் பொது வேட்பாளருக்கு வாக்களித்து, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி, ஆட்சி மாற்றத்திற்கு பங்களிக்க நுவரெலியா மாவட்ட மக்கள் முடிவு செய்துள்ளதை அங்கிருந்து வரும் செய்திகள் எங்களுக்கு தெரிவிக்கின்றன.
இதே நிலைப்பாட்டிலேயே கொழும்பு, கண்டி,மாத்தளை, பதுளை, இரத்தினைபுரி, கேகாலை, காலி, களுத்துறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் வாழும் நமது மக்களும் இருக்கின்றார்கள் என்பதையும் எம்மால் அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே எமது வாக்காளர்களை கொண்டு அதிகபட்ச வாக்களிப்பு விகிதத்தை உறுதிப்படுத்துவதே எமது கடமையாக இருக்க வேண்டும்.