எபோலா நோய் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 6,583 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்தியறிக்கையில், கடந்த டிசம்பர் 10ம் திகதியளவில், லைபீரியா, கினீ, சியரா லியோன் ஆகிய நாடுகளில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,188 ஆக உள்ளது.
சியரா லியோனில் 8,069 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,899 பேர் உயிரிழந்தனர்.
லைபீரியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,765 ஆக இருந்த நிலையில், 3,222 பேர் உயிரிழந்தனர்.
ஓராண்டுக்கு முன்னர் இந்நோய் அறிகுறி தென்பட்ட கினீ நாட்டில் இதுவரை 2,354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,462 பேர் உயிரிழந்தனர். மாலி நாட்டில் 6 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அமெரிக்காவில் ஒருவரும், நைஜீரியாவில் 8 பேரும் உயிரிழந்தனர்.
ஸ்பெயின், செனகல் நாடுகளில் தலா ஒரு நபர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டனர். எபோலா சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட பல சுகாதாரப் பணியாளர்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 639 பேரிடம் நோய் பாதிப்பு உள்ளது தெரிய வந்த நிலையில், 349 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.