எனது நாடு பற்றி எனக்கில்லாத அக்கறை வெள்ளையர்களுக்கு ஏன்? என்று கேட்பவரும் அதற்கமைய எவருக்கும் அடிபணியாமல் சர்வதேச அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து வெற்றி பெற்றவருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை இன்னும் 40 வருடகாலம் ஆட்சியில் நிலைக்கச் செய்வோம் என்று அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர தர்மராஜ விகாராதிபதி வல்பொல பியநந்த தேரர் தெரிவித்தார்.
இலங்கை சர்வதேச பிக்குகள் முன்னணியின் ஏற்பாட்டில் இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முன்பு நாட்டு மக்களை வறுமை என்ற பெயரில் முடக்கி வைத்த தலைவர்கள் தான் இருந்தனர்.
அதற்கு மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ சர்வதேச சக்திகள் மற்றும் புலம் பெயர் புலி உறுப்பினர்களினது அழுத்தங்களையும் எதிர் கொண்டு வெற்றிகரமாக யுத்தத்தையும் நிறைவு செய்ததோடு விமான நிலையம், துறைமுகம், அதிவேக வீதிகள் என்று இலங்கையர் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாமலிருந்த பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறான ஒரு ஜனாதிபதிக்கு சவாலாக அணிதிரண்டுள்ள எதிர்த் தரப்பில் சந்திரிகாவின் பண்டார நாயக்க குடும்பம் 49 வருடம் நாட்டில் அரசியல் செய்திருந்த போது செய்யாத அபிவிருத்தித் திட்டங்களை மஹிந்த ராஜ பக் ஷ 9 வருடத்தில் செய்து காட்டியுள்ளார். இவ்வாறு இருக்கையில்,
மீண்டும் முன்னைய தலைவர்கள் கூட்டாக திரண்டுள்ள எதிரணி ஆட்சியை கைப்பற்ற பார்க்கிறது. இதற்கு மக்கள் இடமளிக்க கூடாது. எமது தேவை மீண்டும் வறுமையல்ல .நாட்டின் அபிவிருத்தியே எமது நோக்கம். இது தான் காலத்தின் தேவையாகவும் அமைகின்றது.
முன்னைய தலைவர்களின் கூட்டுச் செயற்பாடு என்பது என்றுமே நடைபெறாத ஒன்று. எதிரணியில் வெவ்வேறு தலைவர்கள் தான் கூடியுள்ளனர். விரைவில் அந்தக் கூட்டணி கலைந்து விடும். அதனால் மஹிந்தவை ஆதரிப்போம். இன்று வெளிநாட்டவர் இலங்கையின் உண்மையான நிலையை அறிந்து கொண்டுள்ளனர்.