எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்பதற்காகவே ஜே.வி.பி. போராடி வருகின்றது. மற்றபடி ஒருவருக்குப் பதிலாக இன்னொருவரை அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதில் ஜே.வி.பி. க்கு உடன்பாடில்லை.
எனவே அரசியலமைப்பை மாற்றி, ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கான போராட்டங்களில் தொடர்ந்தும் ஈடுபட ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக தற்போதைக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவை வழங்குவதில்லை என்று ஜே.வி.பி. உயர்பீடம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் குழுவை கூட்டி, உரிய முறையில் ஊடகங்களுக்கும் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே வரலாற்றுத் திருப்புமுனையான காலகட்டத்தில் ஜே.வி.பி. இவ்வாறான ஒரு முட்டாள்தனமான தீர்மானத்தை எடுப்பது மஹிந்தவுக்கு ஆதரவான நடவடிக்கையாகவே மாற்றம் பெறும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு தேர்தலிலும் ஜே.வி.பி.யின் ஆதரவைக்கொண்டே மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment