கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவின் காரணமாக ஏற்பட்ட மனிதப் பேரவலம் தொடர்பில் அரசாங்கம் மட்டுமல்லாது முழு நாடுமே சோகத்தில் உறைந்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன நேற்று சபையில் தெரிவித்தார்.
அத்துடன் இந்த அவலத்தில் பாதிக்கப்பட்டு அநாதரவாகியுள்ள 75 சிறுவர் சிறிமியரின் பாதுகாப்பு அவர்களது எதிர்காலத்தேவைகள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்பதாகவும் அவர் கூறினார்.
கொஸ்லந்தை சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கூற்றினை வெளியிட்டே அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கொஸ்லந்தை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் மட்டுமல்லாது முழு நாடும் இன்று கவலைக்குள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நலன்புரி வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கு 6 லயன்கள் மண்ணில் புதையுண்டிருப்பதாகவும் இதில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 330 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 75 சிறுவர்களும் தொழிலுக்கு சென்ற நூறுபேர் மட்டிலானோரும் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 75 சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது எதிர்காலம் என்ற சகல விடயங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை அவதானித்துள்ளதுடன் பாதுகாக்கப்பட்டவர்களையும் சந்தித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறும் அதிகாரிகளுக்கு பணிபுரை விடுத்துள்ளார்.
மேலும் மரணமானவர்களுக்கான இறுதி சடங்குகளுக்கான பொறுப்புக்களையும் அரசே ஏற்றுள்ளது என்றார்.
0 comments :
Post a Comment