ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்காக தேர்தலில் குதித்தால் இலங்கைப் பிரஜையெனும் அடிப்படையில் நானே அடிப்படை உரிமை வழக்குத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜராகி வாதாடுவேன் என தெரிவித்துள்ளார் முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா.
18வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் ஜனாதிபதி மீண்டும் போட்டியிடலாம் என எண்ணிக்கொண்டிருப்பினும் அந்த சட்டமூலம் நல்லெண்ணத்தில் திருத்தப்படவில்லையெனும் உண்மை ஒரு புறம் இருக்க அரசியல் யாப்பின் 31 (2) வது பிரிவின் படி அவர் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக வர முடியாது என்றும் அவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் தானே வழக்குத் தொடரப்போவதாகவும் மேம்முறையீட்டு நீதிமன்றம் அடிப்படை உரிமை வழக்கை விசாரித்தேயாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து சக்திகளும் இன,மொழி பேதமின்றி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக ஜனாதிபதி பதவியில் அமர்வதை எதிர்த்து வரும் நிலையில் உலகில் கடைப்பிடிக்கப்படும் ஜனநாயக விதிகளை மீறி ஒரே நபர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாக வரக்கூடிய வகையில் 18வது சட்டமூல சீர்திருத்தத்தினை வெற்றிபெறச் செய்தது தாமேயென அண்மைக்காலம் வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெருமை பேசி வந்ததும் தற்போது தாம் எதிர்பார்த்தபடி கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஓகஸ்ட் மாதம் கிடைக்காத நிலையில் தாம் வரலாற்றுத் தவறிழைத்து விட்டதாக தெரிவித்து வருவதும், தமது செயற்பாட்டை நியாயப்படுத்த இலங்கைக்கு சர்வாதிகார ஜனாதிபதிதான் வேண்டும் என அக்கட்சியின் செயலாளர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment