இலங்கையில் இருந்து துபாய்க்கு கார் கழுவும் வேலை செய்ய சென்ற ஒருவர், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தனது மனைவி மற்றும் 4 வயது மகளுடன் அங்கேயே வசித்து வந்தார்.
வேலை செய்த நிறுவனத்தில் அதிகமாக கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாததால், கடன் அளித்தவர், அவர் மீது போலீசில் புகார் அளித்தார். அந்நபரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கடனை அடைக்க முடியாததால் அவரை சிறையில் அடைக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அவரது பிலிப்பினோ மனைவி தனது 4 வயது மகளை அதே பகுதியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒப்படைத்து விட்டு, துபாயில் இருந்து வெளியேறி எங்கோ சென்று விட்டார். பட்ட கடனை அடைக்க முடியாத தந்தை சிறையில் வாட, பெற்ற தாய் தற்போது எங்கே இருக்கிறார்? என்பது கூட தெரியாத நிலையில் தவித்த அந்த 4 வயது சிறுமியின் பரிதாப நிலையை கண்டு பதறிப் போன அந்த இலங்கை பெண், பெற்றோரின் பராமரிப்பு இல்லாமல் சிறுமி படும் வேதனையை துபாய் போலீசாரின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தெரியப்படுத்தினார்.
இதன் பின்னணியில் உள்ள உண்மை நிலை பற்றி விசாரித்த இந்த துறையினர், இவ்விவகாரத்தை துபாய் போலீசாரின் மனித உரிமை பிரிவுக்கு முன்மொழிந்தனர். தனியாக தவிக்கும் சிறுமியின் அவல நிலையை கண்டு பரிதாபப்பட்ட அவர்களின் ஏற்பாட்டின் பேரில் இலங்கை தொழிலாளிக்கு கடன் அளித்த நிறுவனத்திடம் சமரசம் பேசப்பட்டது.
அவர் பட்ட கடனை அடைக்கும் பொறுப்பை போலீசார் ஏற்றுக் கொண்டதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அந்த நபரை துபாய் போலீசாரின் மனித உரிமை பிரிவின் வட்டார பிரிகேடியர் முஹம்மத் அல் முர் அவரது மகளுடன் சேர்த்து வைத்தார். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தந்தையை பிரிந்திருந்த சிறுமி ஓடோடி வந்து அவரை இறுக அணைத்துக் கொண்டு அழுத காட்சியை கண்ட துபாய் போலீசார் கண் கலங்கி, நெகிழ்ந்துப் போயினர்.
தண்டனை காலம் முடிந்த பின்னர் அந்நபரை துபாயை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற அந்நாட்டின் சட்டத்தை அறிந்திருந்த போலீசார், விடுதலையான நபருக்கும், அவரது மகளுக்கும் இலங்கை செல்வதற்கான விமான டிக்கட்டை தங்களது சொந்த செலவில் வாங்கித் தந்தனர். மேலும், இலங்கைக்கு சென்று வேறு வேலை கிடைக்கும் வரை தந்தை-மகளின் சில மாத கால வாழ்க்கை செலவினங்களுக்கு தேவையான பணத்தையும் தந்து, விமானத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர்.
காவல் துறை என்பது தண்டிக்கும் அதிகாரம் படைத்தது மட்டுமல்ல... ஆபத்தில் தவிப்பவர்களை மன்னித்து, அவர்களின் மறுவாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும் கடமையுள்ள ஒரு சமூக அமைப்பாகும் என்பதை இச்சம்பவத்தின் மூலம் நிரூபித்துள்ள துபாய் போலீசாரின் மனித நேய சேவையை உலக நாடுகளின் பிரபல ஊடகங்கள் வெகுவாக பாராட்டியுள்ளன. thanks: vannimedia
0 comments :
Post a Comment