இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் விமானமொன்றின் மூலம் வந்தடைந்த நாகூர் ஆதுமை பாத்திமா (45), ஆயுப் பாத்திமா ரொசானா (43) மற்றும் மொஹமட் இப்திகார் பாமீதா (48) ஆகிய மூவரும் 1.169 கிலோ கிராம் எடையுள்ள தங்கப் பாளங்களையும், தங்க ஆபரணங்களையும் சூட்சுமமான முறையில் உடலில் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த பிரஸ்தாப மூன்று பெண்களும் குடிவரவு மற்றும் சுங்க சோதனைச் சாவடி ஊடாக கடந்து சென்றனர். ஆயினும் அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை பின்தொடர்ந்தே அவதானித்துக் கொண்டிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மத்திய கைத்தொழில் பாதுகாப்பு படையினர் வருகையாளர் பகுதியில் வைத்து தங்கள் பாதணிகளிலிருந்து குறித்த தங்கப் பாளங்களையும், ஆபரணங்களையும் கைப் பை ஒன்றுக்குள் போட்ட படியிருந்த இரண்டு பெண்களைக் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் சுங்க விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்தே தங்கம் முழுவதும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மாத முற்பகுதியிலும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான மூலம் வருகை தந்திருந்த பயணிகளால் இதே பாணியில் மேற்கொள்ளப்பட்ட தங்கக் கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. மேற்படி தங்கக் கடத்தல் கும்பலின் அங்கமாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் நிறுவன பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் முகாமையாளர் ஒருவரும் இருந்துள்ளமை கண்டறியப்பட்டது.
இதுபற்றி மேற்படி படையணியின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ராகேஷ் ரஞ்சன் தெரிவிக்கையில், இந்தியாவுக்குள் தங்கம் கடத்தும் புதிய மையமாக இலங்கை தற்போது மாறியுள்ளதாகவும் இதற்கு முன்னர் இத்தகைய தங்கக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியோர் சென்னை சர்வதேச விமான நிலையத்திலேயே தரையிறங்கி வந்த போதிலும் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தமது பயண மார்க்கத்தை மாற்றியுள்ளதாகவே தெரிகின்றதெனவும் குறிப்பிட்டார்.
தீவிர தங்கக் கடத்தல் இடம்பெற்று வரும் குறிப்பிட்ட மார்க்கங்களில் பயணிக்கும் விமானங்களைக் கண்காணிக்கும் பொருட்டு விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகளுக்கு ஒரு புறமாக தற்போது மத்திய கைத்தொழில் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment