உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா நகர் செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றவர்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் வீடு திரும்பினர்.
சிலர் தமது வீடுகளுக்குச் செல்ல வெட்கப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.கொழும்பிலுள்ள முகவர் நிலையம் ஒன்றின் மூலமாகவே இவர்கள் தமது உம்றாவுக்காக பயண ஏற்பாடுகளுடன் கடந்த 30 ஆம் திகதி வியாழக்கிழமை கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றுள்ளனர். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு புறப்படுவதனால் பகல் ஒரு மணிக்கு முன்பே விமான நிலையம் வரும்படி கூறிய முகவர், அவர்களுக்கான பயணச் சீட்டுக்களை வழங்கியுள்ளார்.
அவர்களின் கடவுச் சீட்டுக்களை விமான நிலையத்தில் வைத்து தருவதாக குறிப்பிட்டுள்ளார்.விமானத்திற்காக நேரம் நெருங்கவே விமான நிலையத்தில் முகவரையோ, முகவர் நிலைய ஊழியர்களையோ காணாததினால் முகவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும் தொடர்பை ஏற்படுத்த முடியாமல் யாத்திரிகர்கள் தத்தளித்துள்ளனர்.
இந்நேரத்தில் இவர்களில் ஒருவருக்கு எப்படியோ முகவருடன் இறுதி நிமிடங்களில் தொடர்பு கிடைத்தபோது முகவரிடம் வினவவே ஏதோ தவறு இடம்பெற்றுவிட்டதாக கூறியுள்ளார்.
இவ்வேளையில் விமானமும் சென்றுவிட்டது. உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக இஹ்றாம் உடையணிந்து வந்திருந்த இந்த 24 பேரும் செயவ்தறியாது திண்டாடி கொழும்பிலுள்ள தமது உறிவனர்களுக்கு தமது நிலைமையை குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்த உறவினர்கள் உடனே செயற்பட்டு கொழும்பு மருதானை பிரதேசத்திலுள்ள அந்த முகவர் நிலையத்தை முற்றுகையிட்டு முகவரை சந்தித்து அவரை மாளிகாவத்தை பகுதியில் வீடொன்றுக்கு அழைத்து வந்துள்ளனர். விமான நிலையத்திலருந்த 24 பேரும் அங்கு சென்றுள்ளனர்.
அங்கு முகவருடன் வாக்குவாதப்பட்டு அல்லோ கல்லோக்கப்பட்டுள்ளனர். பின்னர் முகவர் எதிர்வரும் செவ்வாய்கிழமை 4 ஆம் திகதி இவர்களை அனுப்பிவைப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.இந்த உம்றா பயணத்திற்கு ஒவ்வொருவரிடமிருந்தும் 75 ஆயிரம் ரூபா முதல் 85 ஆயிரம் ரூபா வரை அறவிடப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment