பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதை பொருட்படுத்தாமலும், இறைவனை மதியாமலும் செயற்படுவதினால் இறுதி எச்சரிக்கை என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் கெட்ட பெயர் ஏற்படுத்த, நீதிமன்றத்திற்கு சார்பாகவும், அரசாங்கத்திற்கு விரோதமாகவும் செய்திகளை எழுதியது, அமைச்சர் ரிசாத் பதியுதீனை நீதிமன்றத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி செய்திகளை எழுதி இஸ்லாம் மதத்தைக் கேவலப்படுத்தியது போன்ற செயல்களுக்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் நீதிமன்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது, நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்தைப் படம் எடுத்தும், நேரடியாகச் சம்பவ இடத்தில் இருந்து செய்திகளைத் திரட்டிய பெலிஸ்டஸ் பச்சேக், ஆனந்த் மார்க், ரொசாரியன் லெம்பட் மற்றும் பஸ்மி ஆகிய நால்வருக்கும், அந்த சம்பவத்தின் பின்னர், தொலைபேசி மூலமாகப் பல தடவைகள் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாகவும், இது தொடர்பில் ஏற்கனவே பொலிசாரிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து, நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையிலேயே இப்போது கடிதம் மூலமாக மூன்று செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.
எனினும் இந்தச் சம்பவத்துக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மறுக்கிறார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மூவரும் தமக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்றும், தம்மை இத்துடன் தொடர்புபடுத்தியுள்ளது திட்டமிட்டு தமிழ் முஸ்லிம் உறவுகளை சீரழிக்கும் ஒரு செயல் என்றும் பிபிசி யிடம் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மூன்று ஊடகவியலாளர்களில் இருவர் அரச ஊடக நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இது குறித்து முழுமையான ஒரு விசாரணையை நடத்தி உண்மையை கண்டறியுமாறு நாட்டின் தலைமை போலீஸ் அதிகாரிக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தை தான் செய்தபோது தம்மை ஆதரித்தவர்கள் இன்று முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் செய்யப்படும் போது ஏன் எதிர்க்கிறார்கள் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கேள்வி எழுப்பினார்.


0 comments :
Post a Comment