Share on
கொழும்பு, கிராண்டபாஸ் பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்த சடலங்களின் பிரேத பரிசோதனை அறிக்கையிலிருந்து கணவனுக்கும் மகனுக்கும் நஞ்சூட்டிய பின்னர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளதாக இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட மூன்று சடலங்களில் கணவனினதும் மகனினதும் கட்டிலிலும் மனைவியின் சடலம் தூக்கிட்டு தொங்கிய நிலையிலும் மீட்கப்பட்டிருந்தன. அத்துடன் கணவன் மற்றும் மகனினது சடலங்கள் பழுதடைந்த நிலையிலும் மனைவியின் சடலம் அந்தளவுக்கு பழுதடையாத நிலையிலும் மீட்கப்பட்டிருந்தன. இதனையடுத்தே இத்தகைய சந்தேகம் ஏற்படுகின்றது என்று கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை இரவு இல.87 கிராண்ட்பாஸ் வீதி கொழும்பு 14 என்ற முகவரியில் அமைந்துள்ள மாடி வீட்டிலிருந்து இரும்பு வியாபாரியான சிவலிங்கம் சிறிகாந்தன் வயது 38, மனைவி கோகிலவாணி வயது 24, மற்றும் இவர்களது மகனான சர்வேஸ் வயது 2 ஆகிய மூவரது சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மறுநாளான செவ்வாய்க்கிழமை காலையில் நீதவான் விசாரணைகளையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையிலேயே இவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளமை நிரூபணமாகியுள்ளது.
இவர்களில் தந்தையான சிறிகாந்தன் மற்றும் 2வயது மகன் ஆகியோரது உடல்களில் நஞ்சு கலந்திருந்தமை பிரேத பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நஞ்சுமருந்து ஊசிமூலம் ஏற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள போதிலும், அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லையென கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அத்துடன் மனைவி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 34 லட்சம் ரூபா கடன் தொல்லைக்காக கணவன் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என நம்ப முடியவில்லை. அவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருந்தாலும் மூவரும் நஞ்சருந்தியே தற்கொலை செய்துகொண்டிருப்பர். ஆனால் அப்படி நடக்கவில்லை. இதனாலேயே கணவனுக்கும் மகனுக்கும் நஞ்சூட்டிய பின்னர் மனைவி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவி உயிரிழப்பதற்கு முன்னர் எழுதியுள்ள கடிதத்தில் எலலோரும் எங்கள் மூவரையும் மன்னித்து விடுங்கள். எங்கள் முடிவுக்கு நாங்களே பொறுப்பு. ஆனால் ஒருசிலரின் கடன் தொந்தரவினால் தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம் என மனைவி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே மனைவியே இறுதியாக உயிரிழந்துள்ளமை நிரூபணமாகின்ற|து எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை உயிரிழந்த மூவரது சடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளன. இன்று காலை 8:00 மணி முதல் 10:00 மணிவரை பொரளையிலுள்ள லங்கா மலர்ச்சாலையில் பூதவுடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முற்பகல் 11:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment