காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் - மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்



காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் கோரிக்கை

நூருல் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காரைதீவு பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் யானைகள் மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்களை நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால், மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் அச்சநிலையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பங்களில் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், மனித–யானை மோதல் என்பது மக்களின் பாதுகாப்பையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் ஒரு தீவிர பிரச்சினையாகும் என தெரிவித்துள்ளார்.

யானைகளின் நடமாட்டம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக தகவல்கள் கிடைத்து வருவதாகவும், இரவு நேரங்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் பிரதேசத்திற்கு நேரடியாக வருகை தந்து நிலைமையை ஆராய வேண்டும் என்றும், யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நிரந்தர மற்றும் நடைமுறைச் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், யானைகளின் வழக்கமான நடமாட்டப் பாதைகள் மற்றும் அவை குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை கண்காணிப்பதற்கான முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், யானைகள் தொடர்பான அவசர நிலைமைகளில் பொதுமக்கள் உடனடியாக தொடர்புகொள்ளக்கூடிய வகையில் உரிய அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் அவசர நடவடிக்கை பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைதீவு பிரதேசத்தில் விவசாயிகளின் பயிர்களுக்கும் யானைகளால் சேதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், மனித உயிர்களைப் பாதுகாப்பதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

“மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உயிரிழப்பு அல்லது பாரிய சொத்து சேதம் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதை விட, அதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே மிகவும் முக்கியமானது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :