நூருல் ஹுதா உமர்-
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.எப்.எஸ். இமானி, சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளதையடுத்து, பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார். சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்திலிருந்து சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்திற்குத் தெரிவாகிய முதல் மாணவி என்ற பெருமையையும் பெற்றுள்ள இமானியின் சாதனையைப் பாராட்டும் வகையில், பாடசாலை வளாகத்தில் விசேட கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாண மட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி பாடசாலைக்கும் கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி இமானிக்கு பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். சுரேஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா ஏ. மலிக், ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஐ. மௌஸுர், திருமதி டேவிட், வீ. தையூப் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
மாணவி இமானியின் இச்சாதனை, பாடசாலையின் கல்வி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் சமூக விஞ்ஞானம் உள்ளிட்ட அறிவுசார் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கான ஊக்கமாகவும் அமையும் என நிகழ்வில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
தேசிய மட்டப் போட்டியில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் மாணவி இமானிக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

0 comments :
Post a Comment