‘ஸ்பைடர் வுமன்’ வலை விரித்து தூக்கிய சாய்ந்தமருது பொலிஸார்!
3-வது மாடியிலிருந்து பாய்ந்து தப்பித்த போதைப்பொருள் தலைவி கால் உடைந்த நிலையில் கைது!
பாறுக் ஷிஹான்-
போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு(76448) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை(13) மாலை சாய்ந்தமருது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வைத்து ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கைதானார்.
40 வயது மதிக்கத்தக்க 1 பிள்ளையின் தாயான இச்சந்தேக நபர் கணவனை இழந்த நிலையில் தனது உறவினர்களின் ஒத்தாசையுடன் நீண்ட காலமாக பல்வேறு போதைப்பொருள்களை விநியோகித்து வந்திருந்தார்.குறித்த பெண் பொலிஸாரின் வருகையை அறிந்து கொண்டால் மேற்குறிப்பிட்ட வீட்டு திட்ட 3 ஆம் மாடியில் இருந்து பல மாடிகளுக்கு லாவகமாக பாய்ந்து சென்று தப்பி செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் தான் அச்சந்தேக நபரான பெண்ணை ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) என செல்லமாக அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.மேலும் கைதாகும் போது இப்பெண் சந்தேக நபர் 2310 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சுருக்கு பொறி வைத்து சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்திருந்தனர்.இதற்கு முன்னரும் இரு வேறு சந்தர்ப்பங்களில் கைதான இச்சந்தேக நபர் அவர் வசிக்கின்ற கல்முனை தலைமையக பொலிஸாருக்கு சவாலாக இருந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி குறிப்பிட்டார்.
மேலும் குறித்த போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் மறைந்திருந்து பல்வேறு போதைப்பொருட்களை விநியோகிப்பதாக தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.இதற்கமைய பெண் பொலிஸாரின் உதவியுடன் மாறுவேடத்தில் பொலிஸார் இவ்விசேட சோதனையினை மேற்கொண்டதுடன் நீண்ட போராட்டத்தின் பின்னர் அச்சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.இக்கைது நடவடிக்கையின் போது பங்கேற்ற பொலிஸாரை பொதுமக்கள் வாழ்த்தியதுடன் நீண்ட கால போதைப்பொருள் விற்பனை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் மேற்பார்வையில்இ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி அவர்களின் ஆலோசனையிலும்இ கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வி.பிரகலாதன் தலைமையிலான குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வி.ஜீவரத்தினம் பொலிஸ் உத்தியோகத்தர்களான அதுவார் (91775) நிவேதன்(94680)பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சாமிலி(10669) உள்ளிட்ட குழுவினர் இந்த விசேட அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
அத்துடன் இக்கைது நடவடிக்கையின் போது கைதான சந்தேக நபர் உட்பட சான்றுப் பொருட்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments :
Post a Comment