கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பகுதியில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட வீதிக்காக முன்னெடுக்கப்பட்ட நடைபாதை புனரமைப்புத் திட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை தகவலறியும் உரிமைகள் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு விளக்கமொன்றை வழங்கியுள்ளது.
குறித்த திட்டத்தில் இரும்புக் கம்பிகள் (Reinforcement) பயன்படுத்தப்படவில்லை என்றும், அதனால் ஒப்பந்தக்காரர்கள் முறைகேடாக செயல்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனையொட்டியதாக தகவலறியும் உரிமைகள் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய நிறைவேற்று பொறியியலாளர் இஸட்.ஏ.எம். அஸ்மிர், “வீதிநடைபாதைகளுக்கு பொதுவாக இரும்புக் கம்பிகள் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபாதைகள் அவற்றின் கீழுள்ள உறுதியான தரையினால் முழுமையாகத் தாங்கப்படுவதால், அவை பெரும்பாலும் அழுத்த விசையை (Compressive Load) மட்டுமே எதிர்கொள்கின்றன என்றும், இழுவிசைகளை (Tensile Stress) தாங்க வேண்டிய கட்டிடங்கள், தூண்கள் அல்லது மேம்பாலங்கள் போன்ற அமைப்புகளுக்கே இரும்புக் கம்பிகள் அவசியமாகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாதைத் திட்டத்திற்கான அசல் திட்ட வரைபடத்திலேயே இரும்புக் கம்பி பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு செய்யப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்ட நிதியின் கீழ் சுமார் 34 இலட்சம் ரூபா மதிப்பீட்டில் 2024 ஆம் ஆண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்த குற்றச்சாட்டுகள் தொழில்நுட்ப புரிதல் இன்மையால் ஏற்பட்டவை என்பது தெளிவாகியுள்ளது எனவும், ஒலுவில் துறைமுக முறைகேடான நிர்மாணிப்பால் ஏற்பட்ட கரையழிப்பு காரணமாக கல்முனை பாதிக்கபப்ட்டுள்ளதாக கல்முனை முன்னாள் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பி.டி. ஜமால் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் கருத்து வெளியிடுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 comments :
Post a Comment