“மலைப் பத்தாண்டு” என்ற பத்து வருட வேலைத்திட்டத்தில் வாழ்வாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்படும்- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க



Ø மலைப் பத்தாண்டுத் திட்டத்தில் வாழ்வாதார மேம்பாட்டுக்கு முன்னுரிமை...

Ø மார்ச் மாத தொடக்கத்தில் மாவட்ட செயலகங்களுக்கு உரிய ஒதுக்கீடுகள் அனுப்பப்படும்...

Ø அனைத்து திட்டங்களும் ஜூலைக்குள் முடிக்கப்படும்...

Ø பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விசேட செயல்பாட்டு அறை...

“மலைப் பத்தாண்டு” என்ற பத்து வருட வேலைத்திட்டத்தில் வாழ்வாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அதற்கான ஏற்பாடுகள் மார்ச் மாத தொடக்கத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

அனைத்து திட்டங்களும் ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், பிரச்சினைகள் குறித்து விசாரிக்க விசேட செயல்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

“மலைப் பத்தாண்டு” அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நேற்று (14) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். இது கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதன் இணைத் தலைவர்களான மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மலைப் பத்தாண்டு திட்டம் இந்த ஆண்டு 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அந்த மாவட்டங்கள் கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை மற்றும் குருநாகல் ஆகும். அந்த 10 மாவட்டங்களில் உள்ள 89 பிரதேச செயலகப் பிரிவுகளில் 4,498 கிராம சேவகர் பிரிவுகளில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இங்கு உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கண்டி மாவட்டத்தில் 19 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 1052 கிராம சேவகர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார். அந்தப் பிரதேச செயலகப் பிரிவுகள் கங்கவட கோரல, குண்டசாலை, பாததும்பர, பன்வில, யட்டிநுவர, உடபலாத, தொலுவ, பாதஹேவாஹட, தெல்தோட்டை, மெததும்பர, அக்குரணை, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ, தும்பனை, ஹதரலியத்த, பஸ்பாகே கோரல, உடுநுவர, உடுதும்பர, கங்கஇஹல கோரல ஆகியனவாகும்.
கண்டி மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அபிவிருத்தி நிதியின் கீழ் கண்டி மாவட்டத்திற்கு 689 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கண்டி மாவட்டத்தில் "“மலைப் பத்தாண்டு” " வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1,900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மலைப் பத்தாண்டு எனப்படும் பத்தாண்டு கால பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 10,000 மில்லியன் ரூபாவாகும். இதன் கீழ் ஒரு பிரதேச செயலகத்திற்கு தலா 100 மில்லியன் ரூபா கிடைக்கும்.

இந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், 10 முக்கிய அபிவிருத்திப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது வாழ்வாதாரம், சந்தை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு, கல்வி, குடிநீர் வசதி, விவசாயம் மற்றும் சிறு நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்கவை, தொலைபேசி மற்றும் இணையம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் வீட்டு வசதிகளை மேம்படுத்துதல். மலையக பிரதேசங்களில் வாழும் பெருந்தோட்ட சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு விரைவான மற்றும் திட்டமிடப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கான மாவட்ட மற்றும் பிரதேச குழுக்களின் இணக்கப்பாடு கிடைத்த பின்னர், மாவட்ட செயலாளர்களின் முழு ஈடுபாட்டுடனும், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் பூரண ஆதரவுடனும் கூட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தை ஜனாதிபதி அலுவலகம், பணவியல், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் மேற்பார்வை செய்கிறது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்தியானந்த, மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜி.எச்.எம்.ஏ. பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், பணிப்பாளர் (செயல்முறை) ரம்யா விஜேசுந்தர மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :