திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து சென்ற அப்பாடசாலை ஆசிரியர் பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமையேற்க விடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்காக வாதாடி நீதியை பெற்றுக்கொடுத்த குரல்கள் இயக்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகளுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.
இன்று புதன் கிழமை கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்,
திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து சென்ற அப்பாடசாலை ஆசிரியர் பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமையேற்க விடாமல் தடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் ஹபாயா அணிவதற்கு தடை விதிக்கப்படமாட்டாது என்றும், ஆசிரியர் பஹ்மிதா றமீஸ் அவர்கள் எதுவித பிரச்சினைகளுமின்றி தனது கடமைகளை தொடர முடியும் என்றும் நல்லெண்ண அடிப்படையில் வழக்குகள் இணக்கமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு பாடசாலை சமூகம் இணக்கம் தெரிவித்துள்ளமையானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஓர் மகிழ்ச்சிகரமான சம்பவமாக போற்றப்பட்டு வருகின்றது.
இவ்விணக்கப்பாடானது காலத்திற்கு காலம் ஒவ்வொரு தலைப்பில் இனவாதத்தை தூண்டி அதில் குளிர் காய விரும்பும் இனவாதிகளுக்கும், வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கும் ஓர் பேரிடியாக இருக்கும். வெற்றிப்பாதையில் பயணிக்கும் பல நாடுகள் இன, மத, குல பேதங்களை அடியோடு அகற்றிய நாடுகளே. ஒரு நாட்டில் இனவாதம் தலை விரித்துதாடுமேயானால் அந்நாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அபிவிருத்திப்பாதையை நோக்கிச்செல்லாது என்பது நிதர்சனமான உண்மை. கடந்த காலங்களில் இனவாதத்தின் ஊடாக நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய தலைவர்களின் கெதி என்னவானது என்பதனையும் நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
எமது நாடு தற்பொழுது சிறிதுசிறிதாக சீரான நிலைமைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படியான இனவாதத்தை பிரதானமாக கொண்ட பிரச்சினைகள் இனவாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் முடிவுக்கு வருவதானது மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு விடயம். இவ்விடயத்தில் களத்தில் நின்று செயற்பட்ட சட்டத்தரணிகள் குறித்த ஆசிரியைக்கு மட்டுமல்லாமல் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் நீதியினை பெற்றுக்கொடுத்தவர்களாகத்தான் நன் பார்க்கின்றேன் என தெரிவித்தார்.

0 comments :
Post a Comment