வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஒரு வருடத்துக்குள் மாத்திரம் போதைப்பொருளுக்கு எதிராக அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர்.பண்டார தெரிவித்தார்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைகளுக்கு எதிராக செம்மண்ணோடை பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் சம்மேளனம் கடந்த வெள்ளிக்கிழமை (27) மாபெரும் விழிப்புணர் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபடும் நபர்களுக்கு நாங்கள் எந்தவித கருணைகளும் காட்டமாட்டோம். அவர்களை கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த அத்தனை விடயங்களையும் மேற்கொள்வோம்.
வாழைச்சேனை - நாவலடி பகுதியில் எட்டுமாத குழந்தையின் தாய் ஒருவரை போதைப்பொருள்களுடன் கைது செய்துள்ளோம். அந்த பெண்ணை விடுவிக்கக் கோரி பல்வேறுபட்ட நபர்கள் எங்களுக்கு அழுத்தங்களை தந்தார்கள். ஆனால் நாங்கள் அவர் மீது எந்தவித அனுதாபங்களும் காட்டாமல் குழந்தையுடன் சிறையில் வைத்துள்ளோம்.
ஆரம்பத்தில் எங்களால் மட்டும்தான் இந்த பணிகளை செய்யவேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது நீங்கள் எல்லாம் சமூகத்தோடு சேர்ந்து இதற்கு எதிராக வந்திருப்பது எங்களுக்கு பெரியதொரு பலத்தை தந்திருக்கிறது.
இந்த போதைப்பொருள் பாவனையில் இருந்து உங்களது சமூகத்தை பாதுகாக்க நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிக்கு நான் மிகவும் தலைவணங்குகிறேன்.
பள்ளிவாசல்கள், சமய நிறுவனங்கள் எங்களுக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன.
இதுபோலவே தொடர்ந்தும் இந்த விழிப்புணர் திட்டங்களை நீங்கள் ஏற்படுத்துங்கள். நாங்கள் அவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை எந்தவிதமான தயவுதாட்சணம் இல்லாமல் வழங்குவோம் என்றார்.
0 comments :
Post a Comment