கல்முனை நூலகத்தின் புனரமைப்பு கால புகைப்படங்களைமுகநூல்களில் புதிதாக வெளியிட்டு விமர்சிக்கும் விஷமிகள்..!



அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர பொது நூலகம் தொடர்பாக முகநூல்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களும் தகவல்களும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018/2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இந்நூலகம் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டது. அப்போது நூலகத்தின் உட்பகுதிகளிலும் புனர்நிர்மாண வேலைகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்குள்ள பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் சிறிது காலம் பெட்டிகளிலும் மூடைகளிலும் கட்டி வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டிருந்தன. உள்ளக புனரமைப்பு வேலைகள் துரிதமாக பூர்த்தியடைந்த பின்னர் அப்புத்தகங்கள் வாசககர்களின் பாவனைக்காக வழமைபோல் புக்செல்ப்களில் முறைப்படி அடுக்கி வைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புனரமைப்பு காலத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை சில விஷமிகள் தற்போது முகநூல்களில் வெளியிட்டு, மாநகர சபையையையும் நூலக நிர்வாகத்தையும் விமர்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

இது மக்களை குழப்புவதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகின்ற விஷமப்பிரச்சாரம் என்பதை இந்நூலகத்திற்கு அன்றாடம் வருகின்ற வாசகர்கள் நன்கறிவார்கள். மேலும், இதன் உண்மை நிலையை கண்டறிய விரும்புவோர் ஒரு தடவை நூலகத்திற்கு விஜயம் செய்து பார்வையிட முடியும்.

மிகவும் பழைமை வாய்ந்த இந்நூலகக் கட்டிடம் கல்முனை மாநகர சபையின் முயற்சியினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்- நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சராக பதவி வகித்தபோது, அந்த அமைச்சின் நிதியொதுக்கீட்டில், புனரமைப்பு செய்யப்பட்டு, கடந்த சில வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. கல்முனைப் பிராந்தியத்தில் முதன் முறையாக e library சேவையும் இந்நூலகத்திலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது Smart Phone பாவனை அதிகரித்திருப்பதால் புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளை படிப்பதற்காக வருகின்ற வாசககர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்திருக்கின்ற போதிலும், மாணவர்கள் கணிசமானளவு வருகைதந்து நூலகத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது வெளிவருகின்ற புதிய நூல்களும் கொள்வனவு செய்யப்பட்டு, அறிவுத்தேடலுக்கு பாரிய பங்களிப்பு வழங்கப்படுகிறது. நூலகத்தை நாடி வருகின்ற அனைத்து வாசகர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு கல்முனை மாநகருக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருக்கின்ற இந்நூலகம் தொடர்பில் பிழையான தகவல்களை வெளியிட்டு, அதனை ஓர் அசிங்கமான இடமாக சித்தரிப்பதன் மூலம் குறித்த விஷமிகள் அடைகின்ற இலாபம்தான் என்ன?

இது கல்முனை மாநகர சபையின் கீழ் வருகின்ற ஒரு விடயம் என்பதற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துமுகமாகவே உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு, குறித்த விஷமிகள் வழமைபோல் எம்மை விமர்சிக்கின்றனர். இவர்களால் எப்போதும் இவ்வாறான துர்நடத்தைகளில் மாத்திரம் ஈடுபட முடியுமே தவிர கல்முனை மாநகரின் அபிவிருத்திக்கோ, இந்நூலகத்தின் வளர்ச்சிக்கோ ஒரு செங்கல்லைத்தானும் கொண்டு வர முடியாது என்பதை மக்கள் அறிவார்கள்- என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :