21 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளிக்காதவர்களுக்கு மக்கள் அடுத்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்- முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா



மினுவாங்கொடை நிருபர்-
21 ஆம் திருத்தச் சட்டத்துக்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஆதரவளிக்காதவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அத்துடன், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருக்காவிட்டால் 20 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த முடியாமல் போயிருக்கும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் மத்திய கொழும்பு அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது கட்சிக் காரியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களே 21 ஆம் திருத்தச் சட்டத்திலும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. ஒரு சில விடயங்களில் சில திருத்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
குறிப்பாக, ஜனாதிபதி அமைச்சுப் பதவி வகித்தல், ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்கும் அதிகாரத்தை இல்லாமல் செய்தல் போன்ற சில விடயங்களே மாற்றப்பட்டிருக்கின்றன. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதாக இருந்தால், அதற்கு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டி ஏற்படுகின்றது.
அதனால், இரண்டாம் கட்டமாக அதனைச் செய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியலமைப்பு திருத்தத்துக்கு, 10 திருத்தங்களைச் சமர்ப்பித்திருக்கின்றது.
விசேடமாக, அதிகாரங்கள் ஒரு இடத்தில் மையப்படாத வகையிலேயே, அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன், 21 ஆம் திருத்தத்துக்கு பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
21 ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது, மக்களின் கருத்தாகும்.
அதனால், 21 ஆம் திருத்தத்துக்கு ஆதரவாளிக்காதவர்களுக்கு, மக்கள் அடுத்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
அதேபோன்று, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாகும்.
என்றாலும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதவி விலகினால், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கும் கட்சியான பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தே, ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட வாய்ப்பு இருக்கின்றது.
அதனால், தற்போதைக்கு அது சாத்தியப்பட மாட்டாது.
மேலும், அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தத்துக்கு முஸ்லிம் கட்சிகளில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருக்காவிட்டால், அது அனுமதி பெற்றிருக்க மாட்டாது.
ஆனாலும், 20 மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. மாறாக, 20 மூலம் ஜனாதிபதிக்கு ஏகாதிபத்திய அதிகாரமே கிடைக்கப்பெற்றது.
அதனால்தான், கொவிட் தாெற்றில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி இருந்தும், ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருந்தார்.
20 க்கு வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் கூட, அந்த அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.
மேலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது, பொதுஜன பெரமுனவுக்கு எண்ணிக்கையிலேயே இருக்கின்றது.
அதனால், எதனையும் சாதிக்க முடியாத நிலையே இருக்கின்றது. இன்று, மக்களின் ஏகாதிபத்திய அதிகாரமே ஓங்கி இருக்கின்றது.
அதனால்தான், 5 வருடத்துக்கு பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் எதிர்ப்பினால் பதவி விலக வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. சட்டப்பிரச்சினை இல்லாவிட்டால், ஜனாதிபதியும் பதவி விலகி இருப்பார் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :