மக்களின் அறவழிப் போராட்டங்களை குண்டர் படை கொண்டு அடக்க முற்படுவது காட்டுமிராண்டித்தனமான ஈனச்செயலாகும்;-கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் பலத்த கண்டனம்



அஸ்லம் எஸ்.மௌலானா-
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜனாதிபதியை பதவி விலகக் கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற பொது மக்கள் மீது அரசாங்கம் தமது குண்டர்களை ஏவிவிட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான ஈனச்செயலாகும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள், ஊழல், மோசடிகள் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வாழ்க்கைச் சுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் திண்டாடும் மக்கள், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அறவழிப் போராட்டங்கள் நடத்துவதை குண்டர் படை கொண்டு அடக்க முற்படுவதானது கோழைத்தனமான ஈனச்செயலாகும்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் ஜனநாயகம், மனித உரிமைகள், மத சுதந்திரம், சிறுபான்மையினரின் சமய, கலாசார உரிமைகள் போன்றவற்றை மறுதலித்து அடக்குமுறைகளை கையாண்டதன் விளைவாகவே சர்வதேசம் இலங்கைக்கு உதவ முன்வராமல் கைவிரித்திருந்தது.

இந்நிலையில் ஒட்டுமொத்த மக்களினதும் நியாயமான போராட்டங்களை அடக்கியொடுக்க முற்படுவதானது தற்போது சில நாடுகளிடமிருந்து கிடைத்து வருகின்ற மனிதாபிமான உதவிகளைக் கூட தடுத்து விடலாம். இதனால் அந்நாடுகள் எமது நாட்டை ஏறெடுத்தும் பார்க்காமல் கைவிடக்கூடிய அபாயம் ஏற்படலாம்.

அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் மனிதன் மனிதனைப் பிடித்து விழுங்கும் அளவுக்கு எமது நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படலாம். இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாதவாறு இறைவன் பாதுகாக்க வேண்டும். அதற்காக எல்லோரும் பிரார்த்திப்போம்.

மக்களின் அவலக்குரல்களுக்கு செவிசாய்த்து, பொருளாதார பிரச்சினைகளுக்கு அவசரமாக தீர்வினைத் தேட வேண்டியதே அரசின் மீதுள்ள கடமையாகும். அதற்காக எமது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்திருக்கின்ற ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் பொறிமுறை மாற்றங்கள் விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதனைச் செய்வதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்திருந்தார்.

ஆனால் இன்று இப்பொறுப்புடைமையை புறந்தள்ளி விட்டு, அதற்குப் பதிலாக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இவ்வாறு அரச அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதற்காகத்தான் ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியிருக்கிறாரா என்று கேட்க விரும்புகிறோம்.

மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்கியொடுக்க முற்படுவதானது நிலைமையை இன்னும் மோசமடையச் செய்து பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் சக்திக்கு முன்னால் அரச அராஜகம் நீண்ட நாட்களுக்கு தாக்குபிடிக்காது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் முதற்படியே மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருக்கிறார். எனினும் அவர் கௌரவமாக பதவி விலக விலகியிருக்க வேண்டும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை தவற விட்டு, குண்டர் படையை ஏவி, கலவரங்களை ஏற்படுத்தி விட்டு, இரத்தக்கறை படிந்த கரங்களுடன், அவமானப்பட்டு- அவப்பெயருடன் விடை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், ஸ்திரமானதும் சர்வேதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான ஆட்சியொன்று அமைவதன் ஊடாகவே பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்கிற தாரக மந்திரத்தை ஏற்றுக்கொண்டு, இனியும் தாமதியாமல் ஜனாதிபதி அதற்கு வழி விட வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் மக்கள் சார்பில் வலியுறுத்துகின்றோம்- என்று கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :