சம்மாந்துறை பிரதேசசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஸ்ரீல.சு.கட்சி அமைப்பாளருமான வி.ஜெயச்சந்திரன் தனது உறுப்பினர் பதவியை (9) செவ்வாய்க்கிழமை பகல் இராஜினாமாச் செய்துள்ளார்.
வளத்தாப்பிட்டியைச்சேர்ந்த திரு.ஜெயச்சந்திரன் தனது இராஜினாமாக்கடிதத்தை பிரதேசசபைத்தவிசாளரிடம் கையளித்தார். அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவரது உறுப்பினர் பதவியை பட்டியலிலுள்ள திருமதி குலமணி தவசீலனுக்கு வழங்குமுகமாக இவ் இராஜினாமாவைச் செய்துள்ளார்.
திரு.ஜெயச்சந்திரன் 2018.02.10ஆம் திகதி நடைபெற்ற சம்மாந்துறை உள்ளுராட்சிசபைத்தேர்தலில் வளத்தாப்பிட்டி வட்டாரத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சி சார்பாக போட்டியிட்டு 1032 வாக்குகளைப்பெற்று உறுப்பினரானார்.
அன்றைய களநிலைவரப்படி ஸ்ரீல.சு.கட்சியின் ஆதரவு ஆட்சியமைக்க தேவைப்பட்டதால் அவர் கட்சியால் உபதவிசாளராக நியமிக்கப்பட்டார்.
அத்தருணம்; பேசிக்கொண்டதற்கமைவாக இருவருடங்களின் பின்னர் தனது சகஉறுப்பினரான அச்சிமொகமட்டிற்கு தனது உபதவிசாளர் பதவியை இராஜினாமாச்செய்து 2020.02.11ஆம் திகதி மனச்சாட்சிப்படி ஒப்படைத்துவிட்டு உறுப்பினராகப்பணியைத்தொடர்ந்தார்.
இந்நிலையில் தன்னுடன் தனதூரில் இணைந்து தேர்தல் வெற்றிக்கு பக்கபலமாகநின்ற திருமதி குலமணிக்கு தனது உறுப்பினர் பதவியை மனச்சாட்சிப்படி ஒப்படைப்பதற்காக தற்போது இராஜினாமாச்செய்துள்ளார்.
அம்பாறை மாவட்ட ஸ்ரீல.சு.கட்சி அமைப்பாளரான வி.ஜெயச்சந்திரன் அவரது சேவைக்காலத்தில் பல கோடிருபாக்களை கொணர்ந்து தமிழ்ப்பிரதேசங்களில் பல அபிவிருத்திவேலைத்திட்டங்களை செய்துள்ளார்.
இறுதியாக தற்போது மல்வத்தை கோவில் வீதிக்கு 1 கோடி ருபா பெறுமதியான எல் ஈ டி பல்ப்புகளை பொருத்திவருவது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment