எப்.முபாரக் -
திருகோணமலை மாவட்டத்தின் நகரை அண்டிய பகுதிகளான ஜமாலியா மற்றும் துளசிபுரம் ஆகிய பிரதேசங்களில் 15 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து அப்பிரதேசங்களில் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்ப்பதுடன் மக்கள் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களை முற்றாக கடைப்பிடிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள கேட்டுக்கொண்டார்.
குறித்த பிரதேசங்களின் களநிலைகளை நேரடியாக அறியும் நோக்கில் அதிகாரிகள் சகிதம் அப்பிரதேசத்திற்கு அரசாங்க அதிபர் இன்று(21) களவிஜயம் மேற்கொண்டார்.
குறித்த பிரதேசங்களில் மக்களின் அநாவசிய நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் தமது அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய சில வர்த்தக நிலையங்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதியை மாவட்ட அரசாங்க அதிபரிடம் வேண்டியதற்கிணங்க உரிய நடைமுறையை மேற்கொள்வதற்கான பொறிமுறையை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இதன்போது திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளருக்கு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் விடுத்தார்.
மேலும் குறித்த பிரதேசத்தை முடுக்கி மக்களை அசெளகரியத்திற்கு உட்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமன்று எனவும் மக்கள் தமது பிரதேத்தில் இருந்து கொவிட் பரவலை ஒழிக்க பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் தேவையென்றும் அத்தியவசிய தேவைக்குப்புறம்பாக வீடுகளில் இருந்து வெளிவருவதை தவிர்க்குமாறும் அரசாங்க அதிபர் மக்களை வேண்டிக்கொண்டார்.
0 comments :
Post a Comment