இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 5 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
குறித்த நடவடிக்கைகளை, (03) செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்குமாறு, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் 4,64,254 குடும்பங்களுக்கு 5,000 ரூபா வழங்கப்படவுள்ளது. இதற்காக, அரசாங்கத்தினால் ஒரு தொகைப்பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்ட மக்களுக்கு மீண்டும் 5 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், நாடு முழுவதிலும் தமது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.
கொவிட் - 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் மேல் மாகாணத்திலுள்ள குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கு குறித்த நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிவாரணங்களை வழங்கும் பணிகள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள். கிராம மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம குழக்கள், பாதுகாப்புப் பிரிவினர் ஆகியோரின் ஒருங்கிணைப்பு மூலம் மேற்கொள்ளப்படும்.
இதேபோன்று, மேல் மாகாணத்திலுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அத்தியவசிய உணவுப் பொருட்கள் முதலானவற்றை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் நடைமுறையொன்றையும், இக்காலப்பகுதியில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்திற்கு எந்த வகையிலும் தடை ஏற்படாத வகையில் தமது அலுவல்களை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment