2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, (12) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைகள் திணைக்களம் இது தொடர்பில் மாணவர்களுக்கும் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை, திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் அக்டோபர் 06 ஆம் திகதி வரை, நாடளாவிய ரீதியிலுள்ள 2,684 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 3,62,824 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்கு இதுவரை அதற்கான அனுமதிப்பத்திரங்கள் கிடைக்காதிருந்தால், விண்ணப்பதாரர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கங்களை உபயோகித்து, பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அதனைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, www.donets.lk என்ற இணையத்தளத்தில்
www.slexams.com மூலம் தரவிரக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், பரீட்சை நிலையங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், சுகாதாரத் துறை அதிகாரிகளை இணைத்துக் கொண்டு பரீட்சை நிலையங்களில் கிருமித் தொற்று நீக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் பரீட்சை நிலையங்களுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகள், அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இது தவிர, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விசேட திட்டத்தின் கீழ் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கம்பஹா கல்வி வலயத்தில் மாத்திரம் இம்முறை உயர்தரப் பரீட்சையில் 7000 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
மினுவாங்கொடை கல்வி வலயத்தில் 37 உயர்தரப் பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment