வேலுகுமார் எம்.பியின் பாராளுமன்ற உரை



பெருந்தோட்டத்துறையை தோட்டத்தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

அத்துடன், மலையக உதவி ஆசிரியர்களின் கோரிக்கை சம்பந்தமாகவும் வேலுகுமார் எம்.பி. , பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09.09.2020) புதன்கிழமை நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வேலுகுமார் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

" இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பெருந்தோட்டத்துறையே திகழ்ந்தது. இன்றும்கூட பிரதான உற்பத்தி பங்களிப்பை பெருந்தோட்டத்துறை வழங்கிவருகின்றது. ஏற்றுமதி ஊடாக அந்நிய செலாவணியும் பெறப்படுகின்றது.
ஆனாலும் அன்று முதல் இன்றுவரை இந்த நாட்டை ஆண்டுள்ள அரசாங்கங்கள் பெருந்தோட்டத்துறைமீது உரிய கவனம் செலுத்தவில்லை. பொருளாதாரத்தை தாங்கி நின்றாலும், இக்கரை மாட்டுக்க அக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பதுபோல வெவ்வேறு துறைகள்மீதே கவனம் செலுத்தப்பட்டது. இதன்காரணமாகவே பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தது. அது நாட்டு பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, எமது நாட்டு வசமுள்ள - வளமான பெருந்தோட்டத்துறையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அதேவேளை, 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனம் கடந்தவாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கின்றோம். ஆனாலும் மலையக தோட்டப்பகுதி பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு இன்னும் உரிய நியமனம் வழங்கப்படவில்லை.

அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த நிபந்தனைகளை நிறைவேற்றி, பயிற்சிகளை பூர்த்திசெய்து ஆசிரியர் சேவையில் இணைவதற்கான தகைமையை பெற்றிருந்தாலும் அவர்களுக்கான உரிய நியமனம், உரிய கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மலையக ஆசிரியர் உதவியாளர்கள் வீதியில் இறங்கிபோராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன், பெருந்தோட்டத்துறை சம்பந்தமான ஜனாதிபதி செலயணியின் கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி செலயணியின் பிரதான பஸில் ராஜபக்சவும் பங்கேற்றார். நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அதற்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளன . ஆகவே, பெருந்தோட்டதுறைமீது தற்போதாவது கவனம் செலுத்தியதற்காக அரசாங்கத்துக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனினும், இச்சந்திப்புக்கு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி எவரும் அழைக்கப்படாமை வேதனையளிக்கின்றது.
நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களை, சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்குவது சம்பந்தமாக இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது விடயத்தில் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். 150 வருடங்களுக்கு மேலாக எமது மக்கள் அத்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். எனவே, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, அவர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். " - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :